நான் நல்லது செய்வதை கருணாநிதி தடுக்கிறார்: விஜயகாந்த்
விருத்தாசலம்: எனது தொகுதியில் மக்களுக்கு நான் நல்லது செய்வதை முதல்வர் கருணாநிதி தடுக்கிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விருத்தாசல சட்டமன்ற உறுப்பினரான தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது சொந்த செலவில் ரூ.1 லட்ச மதிப்பில் 50 பேரி கார்டுகளை செய்து கொடுத்தார். ஆனால் பேரி கார்டில் விஜயகாந்தின் பெயர் எழுதப்பட்டிருந்ததால் விருத்தாசல போலீசார் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் வெகு நாட்களாக கேட்பாரற்று கிடந்த பேரிகார்டுகளை தேமுதிகவினர் நேற்று நள்ளிரவில் லாரியில் ஏற்றிச் சென்று போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் வரிசையாக வைத்து விட்டனர்.
இதை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்து அதனை லாரிகளில் மீண்டும் ஏற்றிக் கொண்டு அப்பகுதியில் உள்ள கோவிலுக்குள் வைத்தனர். இதைக் கண்ட தேமுதிகவிர் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் செய்த தேமுதிகவனரை போலீசார் சமாதானம் செய்தும் அவர்கள் தொடர்ந்து மறியல் செய்ததால் 14 தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர்.
பேரிகார்டுகளை போலீசார் வைக்க விடாததால் அடுத்த வாரம் மாவட்டம் தழுவிய போராட்டம் நடத்த தேமுதிகவினர் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அரசாங்கம் படப்பிடிப்பில் இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதாவது,
சில மாதங்களுக்கு முன்னர் எனது தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது விருத்தாசலத்தில் போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும், பேரிகார்டர் வைத்தால் விபத்து குறைய வாய்ப்புள்ளது எனவும் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.
எனது சொந்தப் பணத்தில் 50க்கும் மேற்பட்ட பேரிகார்டுகள் செய்து போலீசாரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தேன். ஆனால் விஜயகாந்த் கொடுக்கும் பேரிகார்டுகளை வாங்காதீர்கள் என காவல்துறை உயரதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் பலமுறை பேரிகார்டுகளை கொடுத்தும் போலீசார் வாங்கவில்லை.
நேற்று முன்தினம், விருத்தாசலம் மேம்பாலம் அருகில் விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் விருத்தாசலத்தில் உள்ள எனது அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த பேரி கார்டுகளை கேட்டனர்.
விபத்து ஏற்படாமல் இருக்க, எனது கட்சி தொண்டர்கள் பேரிகார்டுகளை வைத்தனர். ஆனால் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே மற்றவர்கள் கொடுத்த பேரிகார்டுகளை வைக்க அனுமதித்துள்ள காவல்துறை தொகுதி எம்.எல்.ஏ.வான நான் கொடுத்த பேரிகார்டுகளை வைக்க அனுமதிக்காமல் எனது கட்சியினரை கைது செய்துள்ளார்கள்.
எனது தொகுதி மக்களுக்கு நான் செய்யும் நல்லதை முதல்வர் கருணாநிதி தடுக்கிறார். இதற்கு பொதுமக்கள் பொறுத்திருந்து பதில் சொல்வார்கள் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications