விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தத் தடை
சென்னை: சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக காரம்பாக்கம், மணப்பாக்கம், கோவூர், கோலம்பாக்கம், கெருகம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் 1069 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதை எதிர்த்து பார்த்திபன் உள்ளிட்ட 14 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான அறிவிக்கையை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறைதான் வெளியிட முடியும். மாநில அரசுக்கு அதற்கான அதிகாரம் இல்லை.
எனவே சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழக அரசால் நிலங்களை கையகப்படுத்த முடியாது. எனவே இதுதொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஜோதிமணி, இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசு மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், அதுவரை நிலம் கையகப்படுத்தும் பணிக்கு இடைக்காலத் தடையும் விதித்தார்.












Click it and Unblock the Notifications