ஆலடி அருணா கொலை வழக்கு கைதிகள் அறையில் 5 செல்போன்கள் பறிமுதல்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆலடி அருணா கொலை வழக்கு கைதிகளின் அறைகளிலிருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தின் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும், கைதிகளிடம் செல்போன் மற்றும் போதை பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, அனைத்து சிறைச்சாலைகளிலும், சிறைத்துறை காவலர்கள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் கஞ்சா, செல்போன்கள் போன்றவை சிக்கி வருகின்றன. சென்னை மத்திய சிறையில் 2 தினங்களுக்கு முன்னர் ஒரு விஐபி கைதியிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் 1,500 பேர் உள்ளனர். இங்கு கைதிகள் செல்போன்களை பயன்படுத்தி வருவதாக உயரதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதில் குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் உள்ள அறைகளில் செல்போன்களின் நடமாட்டம் அதிகமாக
இருப்பதாக அறிக்கை அனுப்பினர்.
இதையடுத்து சிறை துறை கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் சிறை காவலர்கள் தண்டனை கைதிகளின் 1வது பிளாக்கிலும், புதிய கட்டிடத்திலும் சோதனை நடத்தினர்.
அதிகாலை 3 மணி வரையிலும் சோதனை நடந்தது. 1வது பிளக்கில் முன்னால் அமைச்சர் அருணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வேல்துரை, பாலமுருகன், வக்கீல் விஜயன், அழகர் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
இவர்களின் அறைகளில் இருந்து 5 நவீன செல்போன்கள், அதற்கான பேட்டரிகள் 7, சார்ஜர்கள் 7, சிம்கார்டு 6 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஒரு ஆண்டாக செல்போன்கள் மூலம் இவர்கள் வெளியில் உள்ளவர்களிடம் பேசியது தெரிய வந்தது. இதனையடுத்து வேல்துரை உள்பட சில கைதிகள் வேறு மத்திய சிறைக்கு மாற்றப்படலாம் என சிறை துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications