துபாயில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள்
துபாய்: துபாயில் நகரம் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
துபாயில் தற்போதுள்ள ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் சுமார் 20 முதல் 30 பயணிகள் காத்திருக்கின்றனர். அலுவலக நேரங்களில் இது அதிகமாக உள்ளது. இதனால் பெண்கள் உட்பட பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே பயணிகளின் வசதிக்காக துபாய் அரசு குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பேருந்து நிறுத்தங்களை அமைக்க முடிவு செய்தது. புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த பேருந்து நிறுத்தம் ஒவ்வொன்றிலும் 8 பேர் அமரவும், 6 பேர் நிற்கும் வகையிலும் இடவசதி செய்யப்பட்டுள்ளது.
துபாய் முழுவதும் 971 குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 88 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தைப் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மின் கம்பத்தில் கார் மோதி விபத்து:
துபாயில் அல்-கிஸஸ் பகுதியில் சிக்னலை வேகமாக கடக்க முயன்ற கார் மின் கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்த காவல்துறை, தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரை உடைத்து காரில் இருந்த ஐந்து பேரையும் மீட்டனர். இதில் ஒருவர் படுகாயமடைந்தார். மூவருக்கு சாதாரண காயம் ஏற்பட்டது.
காயமடைந்த அனைவரும் எகிப்து அல்லது லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications