சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறார் மோடி - பிரதமர்
ராஜ்கோட்: சிறுபான்மையினர் மனதில் பய உணர்வை ஏற்படுத்தி, அவர்களை அச்சத்திலேயே வாழுமாறு செய்துள்ளார் நரேந்திர மோடி என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், ராஜ்கோட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், குஜராத்தில் சட்டத்திற்கு சுத்தமாக மரியாதையே இல்லை. தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் என்ற போர்வையில், அப்பாவிகளை சுட்டுக் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றனர்.
சிறுபான்மை சமூகத்தினர் மனதில் பய உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் நரேந்திர மோடி. இதன் மூலம் அவர்கள் அச்ச உணர்வுடனேயே வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அரசுக்கு ஆதரவாக சிறுபான்மையினர் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இல்லாவிட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற பய உணர்வை சிறுபான்மை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்.
ஆனால் சட்ட் அனைவருக்கும் பொதுவானது. அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஒரு அரசின் கடமை என்பதை மோடி மறந்து விட்டார் என்றார் சிங்.
பின்னர் செய்தியாளர்களிடம் மன்மோகன் சிங் பேசினார். அப்போது, சோனியா காந்தி தன்னை மரண வியாபாரி என்று கூறியதால்தான் சொராபுதீன் ஷேக் குறித்து நான் பேசினேன் என்று மோடி கூறியிருப்பது குறித்து மன்மோகன் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு சிங் பதிலளிக்கையில், மோடி அளித்துள்ள விளக்கம் ஏற்கும்படியானது அல்ல. சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடு இது. இதில் யாருமே சட்டத்திற்கு மேல் கிடையாது. சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அனைவருமே நடக்க வேண்டும்.
குஜராத் மீது மத்திய அரசு பாரபட்சமாக நடப்பதாக மோடி கூறுவதில் சிறிதளவும் உண்மை இல்லை. மாநில அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மத்திய அரசின் தேசதிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் குஜராத்தில் 6 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் குஜராத் முழுமைக்கும் இது விரிவுபடுத்தப்படவுள்ளது. குஜராத் அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது என்றார் சிங்.
அப்சல் குரு தூக்கிலிடப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சிங் பதிலளிக்கையில், நீதிமன்றங்கள் தங்களது கடமையைச் செய்து விட்டன. மேலும் சில காரியங்கள் நடைபெற வேண்டியுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications