அதிமுகவின் போராட்டங்களை மக்கள் ஒரு பொருட்டாக கருதுவதில்லை-ராமதாஸ்
மதுரை: அதிமுக தினந்தோறும் நடத்தும் போராட்டங்களை தமிழக மக்கள் ஒரு பொருட்டாக கருதுவதில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
காவிரி நீர் உரிமையை மெல்ல மெல்ல இழந்து விட்டோம். முல்லை பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்டுவோம் என கேரளா மிரட்டுகிறது. பாலாற்றில் அணை கட்டுவோம் என்று ஆந்திரா சொல்கிறது. கேரள அரசின் சட்டத்தை எதிர்த்து அதிமுக ஆட்சியில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணைக்கே வரவில்லை.
விதிகளை மீறி சென்னையில் கட்டப்பட்ட 30,000 கட்டடங்களை இடிக்க உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்ட பின்னரும் அவற்றை காப்பாற்ற மாநில அரசு அவசர சட்டம் கொண்டுவந்தது. அதை உயர்நீதிமன்றம் செல்லாது என அறிவித்தது.
ஆனாலும் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு செய்து இடைக்கால தடை பெற்றது. வணிக வளாகங்களை காப்பாற்றும் விஷயத்தில் தமிழக அரசு காட்டிய இந்த அவசரம் முல்லைப் பெரியாறு, பாலாறு வழக்குகளில் காட்டப்படவில்லை.
பாலாற்றில் புதிய அணை கட்டுவது நிச்சயம் என அம்மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி கூறியுள்ளார். எனவே பொதுப்பணித்துறை அமைச்சர் டெல்லியில் சட்ட நிபுணர்களை சந்தித்து, தமிழகத்தின் உரிமையை காக்க முன்வர வேண்டும். நதிநீர் சிக்கல்களை தீர்க்க, பிரதமர் தலைமையில் தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்டவேண்டும்.
தமிழக அரசியலில் குற்றவாளிகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணத்தை அறிய அரசு நியமித்த குழு, சம்பந்தமில்லாத பரிந்துரைகளை செய்துள்ளது.
இதேபோல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்னவேல் பாண்டியன் தலைமையிலான குழு தென்மாவட்ட இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து ஒரு பரிந்துரையை அளித்தது. அதற்கும் முடிவு தெரியவில்லை. இந்த 2 குழுக்கள் அளித்த பரிந்துரையின்படி அரசு எடுத்த நடவடிக்கை என்ன
குற்றவாளிகளே நேரடி அரசியல்வாதிகளாக வந்து விட்டனர். மாநிலத்தில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், போன்றவற்றை அடியோடு தடுக்க வேண்டுமென்றால், காவல்துறை செயல்பாட்டில் மாற்றம் வேண்டும். காவல்துறை செயல்பாடுகளை பகிரங்கமாக ஆய்வு செய்ய வேண்டும். தலைவர்களும் கிரிமினல் குற்றவாளிகளை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.
வேளாண்மை கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்தால் கல்லூரி மற்றும் விடுதிகளை அரசு மூடியுள்ளது. ஆனால் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 3 மாதங்களாக நடத்திய போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக தினந்தோறும் நடத்தும் போராட்டங்களை மக்கள் ஒரு பொருட்டாக கருதுவதில்லை. ஏனென்றால் ஜெயலலிதா தனது ஆட்சியில் ஏகப்பட்ட தவறுகள் செய்துவிட்து தான் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications