மலேசிய பிரதமர் மீது ஹிண்ட்ராஃப் தலைவர் போலீஸில் புகார்
கோலாலம்பூர்: விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் எங்களுக்குத் தொடர்பாக இருப்பதாக மலேசிய அரசு கூறுவது அபாண்டமான, பொய்யான குற்றச்சாட்டாகும். இந்தப் புகாரைக் கூறிய பிரதமர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழுவின் (ஹிண்ட்ராஃப்) தலைவர்களில் ஒருவரான உதயக்குமார் கோலாலம்பூர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
மலேசியாவில் போர்க்கொடி உயர்த்தியுள்ள தமிழர்கள் அமைப்பான ஹிண்ட்ராஃப் மீது மலேசிய அரசு சமீபத்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியது. மேலும் தீவிரவாதிகளின் ஆதரவைப் பெற அவர்கள் முயற்பிப்பதாகவும் மலேசிய அரசு குற்றம் சாட்டியது.
இந்தப் புகார்களை ஹிண்ட்ராஃப் அமைப்பு மறுத்துள்ளது. இந்த நிலையில் அரசின் குற்றச்சாட்டுக்கள் அபாண்டமானவை, இந்தக் குற்றச்சாட்டை மலேசிய அரசால் நிரூபிக்க முடியுமா என்று அமைப்பின் தலைவர்களில் ஒருவரான உதயக்குமார் கேட்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக பிரதமர் அப்துல்லா அகமது படாவி, அதிகாரிகள் மீது கோலாலம்பூர் காவல்துறையில் புகார் மனுவையும் அவர் கொடுத்துள்ளார். அதில், எங்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், எனவே ஹிண்ட்ராஃப் அமைப்பினரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்கள் மீது உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நேரிடும் என பிரதமர் உள்ளிட்டோர் எச்சரித்துள்ளனர்.
இது மிகவும் அபாண்டமான புகாராகும். எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை அவர்கள் கூறியுள்ளனர். மேலும், பிரச்சினையையும் திசை திருப்ப முயலுகின்றனர்.
பிரதமர் உள்ளிட்டோரின் இந்தப் புகார் இன ரீதியான, கிரிமினல்தனமான, அவதூறான, கெட்ட நோக்கத்துடன் கூடியதாகும். எனவே பிரதமர் உள்ளிட்டோர் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் உதயக்குமார்.












Click it and Unblock the Notifications