திமுக இளைஞரணி மாநாடு: உள்துறை செயலரிடம் அதிமுக புகார்
சென்னை: நெல்லையில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக, விதிமுறைகளுக்குப் புறம்பாக தனியார் பேருந்துகளின் வழித் தடங்கள் திருப்பி விடப்படப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரி தமிழக அரசின் உள்துறைச் செயலாளரிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சட்டசபை அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கொறடா கே.ஏ.செங்கோட்டையன், பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் கையெழுத்திட்ட மனு இன்று உள்துறைச் செயலாளர் மாலதியிடம் அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், வருகிற 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நெல்லையில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக, மாநிலம் முழுவதும் 5000 பேருந்துகளை, அவற்றின் வழக்கமான வழித்தடத்தை மாற்றி மாநாட்டுக்கு வருமாறு திமுக தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
வழக்கமான வழித்தடங்களில் செல்லாமல் இந்தப் பேருந்துகள் நெல்லை மாநாட்டுக்காக இயக்கப்பட்டால் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என பல்வேறு தரப்பினரும் பெரும் துன்பத்திற்கு ஆளாவார்கள்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி விதிமுறைகளுக்குப் புறம்பாக, பேருந்துகள் இயக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. தனியார் பேருந்துகள் வழக்கமான வழித்தடத்திலேயே இயக்க வழி வகை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.