யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல, சொல்கிறார் வாசன்
சென்னை: தமிழகத்தில் இருக்கும் எந்தவொரு இயக்கத்தையும் விட காங்கிரஸ் சளைத்தது அல்ல என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,
தமிழக காங்கிரசுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது. சோனியா காந்தியின் எளிமை, நேர்மை, மதச்சார்பின்மையை உலகமே பாராட்டுகிறது.
இளைஞர்களும், மாணவர்களும் ராகுல்காந்தி கரத்தை வலுப்படுத்த சபதம் ஏற்கவேண்டும். பாரதீய ஜனதா ஆட்சி காலத்தில் மக்கள் அல்லல்பட்டனர். நல்லதொரு கூட்டணியை உருவாக்க மதவாத ஆட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறந்த திட்டங்களை தரும் ஆட்சியாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திகழ்கிறது. வரும் காலத்தில் இந்த கூட்டணி இந்தியாவை வல்லரசாக மாற்றும். ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் மத்திய ஆட்சி செயல்படுகிறது. கிராமப்புற வளர்ச்சிக்காக மட்டும் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றியை தமிழக மக்கள் தந்தார்கள். அந்த நன்றியை சோனியா மறக்கவில்லை. எந்த மாநிலத்தையும் விட கூடுதல் நிதி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
65 திட்டங்களுக்காக ரூ. 35,871 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணித்தும் வருகிறோம்.
தமிழகத்தில் எந்த குறையும் இல்லாமல் நிறைவேற்றப்படுகிறது. மத்திய அரசுக்கு இணக்கமாக நல்லாட்சி தமிழகத்தில் நடக்கிறது. இதே நிலை குஜராத்திலும் வர வேண்டும் என்று சோனியா எதிர்பார்க்கிறார்.
நரேந்திர மோடியின் மீது இந்திய மக்கள் வைத்திருக்கும் எண்ணத்தை தான் சோனியா பிரதிபலித்தார். ஆனால் மோடி சோனியாவை விமர்சிக்கிறார். சோனியாவை விமர்சிக்கும் தகுதி மோடிக்கு இல்லை.
தமிழக காங்கிரசுக்கு பல லட்சியங்கள் உள்ளன. காமராஜர் ஆட்சி வரவேண்டும். அவரது ஆட்சியில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்ந்தது. அந்த நிலையை மீண்டும் கொண்டு வருவோம்.
கடந்த 40 வருடங்களாக ஆட்சியில் நாம் இல்லை என்றாலும் மற்ற கட்சிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது காங்கிரஸ் தான். காங்கிரஸ் தொண்டர்கள் மக்கள் பணி, இயக்கப் பணி என இரண்டையும் இரு கண்களாக நினைத்து உழைக்க வேண்டும் என்றார் வாசன்.