பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு
டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது என மத்திய அரசு தீர்மானித்து விட்டது. மேலும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான சுங்க வரியை ரத்து செய்யவும் அது முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை செயலாளர் எம்.எஸ். சீனிவாசன் கூறுகையில், பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. விலையை நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கமிட்டி விலை நிர்ணயத்தை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும்.
வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சரவைக் குழு, பெட்ரோலியப் பொருட்கள் மீதான சுங்க வரியை ரத்து செய்வது குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும்.
இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணை நிறுவனங்களுக்கு, பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தாததால், தினசரி ரூ. 250 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது.
பெட்ரோல் மூலம் லிட்டருக்கு ரூ. 8.74ம், டீசல் லிட்டருக்கு 9.92 ரூபாயும், மண்ணெண்ணை லிட்டருக்கு 20.53 ரூபாயும், சமையல் வாயு சிலிண்டருக்கு 256.35 ரூபாயும் இழப்பு ஏற்படுகிறது என்றார் அவர்.
வருகிற 14ம் தேதி பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு கூடி பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து இறுதி முடிவை எடுக்கவுள்ளது.
இந்தக் குழுவில் அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், லாலு பிரசாத் யாதவ், டி.ஆர்.பாலு, சரத் பவார், முரளி தியோரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.