செல்போன் எண்ணை வெளியிட்டு செக்ஸ் தொல்லை- தோழிகள் மீது பெண் புகார்
சென்னை: இணையத் தளத்தின் தனது செல்போனை எண்ணை வெளியிட்டு, தன்னை உல்லாசத்துக்கு அழைத்தால் போகும் பெண் போல காட்டி அவமானப்படுத்திவிட்டதாக தன்னுடன் வேலைபார்த்த தோழிகள் மீது இளம் பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஜெனிவா இன்று காலை போலீஸ் கமிஷனர் நாஞ்சில்குமரனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில்,
நான் அழகுக்கலை படித்துள்ளேன். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்தேன். வேலைக்கு சேரும்போது எனது பயோ-டேட்டாவை அங்கு கொடுத்திருந்தேன்.
என்னுடன் படித்த தோழிகளும் அங்கு வேலை பார்த்தனர். பழைய தோழிகளுடன் பேசுவதற்காக இணைய தளத்தில் ஒரு பகுதியை உருவாக்கி இருந்தோம்.
அதில் நான் எனது தந்தையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டிருந்தேன்.
நான் வேலை பார்த்த ப்யூட்டி பார்லரில் எனக்கு மட்டும் படிப்புக்கு தகுந்த வேலை தராமல் சுத்தம் செய்யும் வேலையைக் கொடுத்தனர். இது தொடர்பாக எனக்கும் தோழிகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டையும் நடந்தது.
இதனால் வேலையை விட்டு நின்றுவிட்டேன்.
இந் நிலையில் இணைய தளத்தில் எனது படத்தின் அருகே என் செல்போன் நம்பரையும் வெளியிட்டு உல்லாசமாக இருக்க என்னை தொடர்பு கொள்ளலாம் என்பது போல அதை என் தோழிகள் மாற்றி அமைத்து விட்டனர். மேலும் எனது தாயாருடனும் உல்லாசமாக இருக்கலாம் என்றும் பதிவு செய்துள்ளனர்.
இதைப் பார்த்தவர்கள் எங்களுக்கு தினமும் போன் செய்து செக்ஸுக்கு அழைத்து வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான போன் கால்கள் வருகின்றன.
இதனால் எங்கள் நிம்மதியே போய்விட்டது. வேலையை விட்டு நின்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் என் தோழிகள் இப்படி செய்துள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் ஜெனீவா கூறியுள்ளார்.