மலேசியா-கிளர்ச்சியை தூண்டிவிட்டதாக ஹிண்ட்ராப் சட்ட ஆலோசகர் கைது
கோலாலம்பூர்: சட்டத்துக்கு எதிராக மக்களை கிளர்ச்சி செய்ய தூண்டிவிட்டதாக இந்து உரிமை நடவடிக்கை இயக்கத்தின் சட்ட ஆலோசகர் பி.உதயக்குமாரை இன்று மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.
மலாய் இனத்தவர்களுக்கு சமமாக பூர்வீக இந்தியர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்புகள் தரப்பட வேண்டும், தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தக் கூடாது என்று கோரி கடந்த மாதம் 25ம் தேதி ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு, இங்கிலாந்து தூதரகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.
இது தொடர்பாக 35க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் இந்து உரிமை நடவடிக்கை இயக்கத்தின் சட்ட ஆலோசகர் உதயகுமாரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
அவர் மீது மக்களை கிளர்ச்சி செய்ய தூண்டிவிட்டு ராஜதுரோகம் செய்து விட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மலேசியாவின் காவல்துறை ஐஜி முசா ஹாசன் கூறியதாவது,
நீதிமன்ற உத்தரவுப்படி ஹிண்ட்ராஃப் தலைவர்கள் மீது விசாரணை நடத்தப்படும்.
இவர்கள் அரசுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியதால் தான் அவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது.
மலேசிய தமிழர்கள் விவகாரத்தை நாங்கள் அமைதியான முறையில் கையாள மாட்டோம். நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றார்.