பேப்பர் வியாபாரியிடம் லஞ்சம்: பிடிபட்ட காவல்துறை உதவி ஆணையர்
திருச்சி: திருச்சியில் பழைய பேப்பர் வியாபாரியிடம் ரூ. 8,500 லஞ்சம் வாங்கிய காவல்துறை குற்றப்பிரிவு உதவி ஆணையர் கையும் களவுமாக பிடிபட்டார்.
திருச்சி பாலக்கரை பகுதியில் பழைய பேப்பர் வியாபாரம் செய்து வருபவர் பரூக் முகம்மது. சிலருடன் சேர்ந்து கூட்டாக இந்தத் தொழிலை செய்து வந்தார் முகம்மது. இந்த நிலையில் கடந்த ஆண்டு திருச்சி மாநகர குற்றப் பிரிவில் ஒரு புகார் கொடுத்தார் முகம்மது.
அதில், தனது பங்குதாரர்கள் பண மோசடி செய்து விட்டதாகவும், நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார். ஆனால் இந்தப் புகார் குறித்து போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து திருச்சி குற்றப்பிரிவு காவல்துறை உதவி ஆணையர் உடனடியாக இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுடன் உதவி ஆணையர் முருகனை சந்தித்தார் பரூக் முகம்மது. ஆனால் வழக்கை விசாரிப்பதற்குப் பதில், விரைவாக முடித்துத் தர வேண்டுமானால், ரூ. 8,500 லஞ்சம் தர வேண்டும் என முருகன் பேரம் பேசியதாக தெரிகிறது.
ஆனால் பணத்தைக் கொடுக்க விரும்பாத பரூக் முகம்மது, பின்னர் வருவதாக கூறி விட்டு வந்தார். மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து டி.எஸ்.பி. அம்பிகாபதியின் ஆலோசனையின் பேரில் அடையாளம் இடப்பட்ட ரூபாய் நோட்டுக்களுடன் முகம்மது, முருகனின் வீட்டிற்குச் சென்றார். லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கையும் களவுமாக முருகனைப் பிடிக்க காத்திருந்தனர்.
லஞ்சப் பணத்தை முருகனிடம் முகம்மது கொடுத்தபோது மறைந்திருந்த போலீஸார் அவரைக் கையும் களவுமாக பிடித்தனர்.
உதவி ஆணையர் லஞ்சம் வாங்கி பிடிபட்டுள்ள விவகாரம் திருச்சி காவல்துறையை அதிர வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications