எஸ்.ஏ ராஜா கொலை முயற்சி-குற்றவாளி சரண்
வள்ளியூர்: ராஜாஸ் கல்வி நிலையங்களின் அதிபர் எஸ்.ஏ ராஜாவை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார். இவர் தான் குண்டு வீசிய குற்றவாளியா அல்லது குற்றவாளியைத் தப்ப வைக்க நடத்தப்படும் நாடகமா என்று தெரியவில்லை.
வடக்கன்குளத்தை சேர்ந்த பிரபல கல்வி தொழிலதிபர் எஸ்.ஏ. ராஜா 20க்கும் மேற்பட்ட மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை நடத்தி வருகிறார். நேற்று காலை ஒரு சர்ச்சில் திருப்பலி பூஜையில் கலந்து கொண்டு விட்டு காருக்கு திரும்பியபோது ஐயப்ப பக்தர்கள் போல் கருப்பு ஆடை அணிந்து வந்த ஒரு கும்பல் சர்சுக்கு வந்து டிரைவர் அமிர்தலிங்கத்திடம், திருமண பத்திரிக்கையை ராஜாவிடம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
ஆனால் டிரைவர் அலுவலகத்தில் வந்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ராஜா தனது மனைவி சோபியாவுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது காக்கரை என்ற பகுதியில் 2 கார்கள் அவர்களை வழி மறித்தன. அதிலிருந்து இறங்கிய 8 பேர் ராஜாவின் கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு கார்களில் ஏறி தப்பினர். இதில் கார் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்து சிதறின.
ராஜாவின் கையில் சிறிது காயம் ஏற்பட்டது. மனைவி சோபியா காயமின்றி தப்பினார். டிரைவர் அமிர்தலிங்கம் படுகாயமடைந்தார். ராஜா காருக்குள்ளேயே மயங்கி விழுந்தார். மேலும் காருக்குகள் எறியப்பட்ட நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடிக்காமல் போனது. இதனால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து நெல்லை எஸ்.பி ஸ்ரீதர் தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.
முன்னாள் சட்ட அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜா ஜாமீனில் தான் வெளியில் உள்ளார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆலடி அருணா கொலை வழக்கில் சிக்கியுள்ள சிலரிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், பேட்டரி சார்ஜர்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை இந்தக் கும்பல் சிறையில் இருந்தவரே எஸ்.ஏ ராஜாவை கொலை செய்ய ஆட்களை ஏவியிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதுகுறித்து ராஜா கூறுகையில், கடந்த 3 மாதங்களாகவே என்னை கொலை செய்ய முயற்சி நடந்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு காரணம் யார் என்பதை என்னால் கூற முடியாது என்றார்.
ஆலடி அருணா கொலைக்கு பழிக்கு பழி தீர்க்கும் விதத்திலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமா அல்லது நெல்லை திமுக மாநாடு நடைபெறும் சமயம் குழப்பத்தை ஏற்படுத்த நடந்த முயற்சியா என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார். இவர் தான் குண்டு வீசிய குற்றவாளியா என்று தெரியவில்லை. இவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தால் தான் முழு விவரமும் வெளிவரும்.