ஹிண்ட்ராப் நிர்வாகிகள் கைது சரியே - கூறுகிறது மலேசியா
கோலாலம்பூர்: இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைகக் குழுவின் நிர்வாகிகள், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது சரியான நடவடிக்கைதான் என்று வெளிநாட்டு தூதர்களிடம், மலேசிய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மலேசியாவில் மலாய் இனத்தவர்களுக்கு சமமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பூர்வீக இந்தியர்களும் மதிக்கப்பட வேண்டும் என்று தமிழர்கள் கோரி வருகின்றனர். இதுதொடர்பாக அமைக்கப்பட்ட ஹிண்ட்ராப் அமைப்பு கடந்த மாதம் கோலாலம்பூரில் ஏற்பாடுசெய்த பேரணி, போலீஸாரின் நடவடிக்கையால் பெரும் வன்முறையாக மாறியது.
இதைத் தொடர்ந்து ஹிண்ட்ராப் அமைப்பினர் மீது மலேசிய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது.
நேற்று ஹிண்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகர் உதயக்குமார் உள்ளிட்ட 5 தமிழர்களை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். இது மலேசியத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமைதான் உதயக்குமார் பிரிவினைவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் வியாழக்கிழமை மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழர்கள் மீதான இந்த நடவடிக்கை குறித்து பல்வேறு வெளிநாட்டுத் தூதர்களிடம் மலேசிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இன்று கோலாலம்பூரில் 70க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதர்களை அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் தமிழர்கள் மீதான நடவடிக்கை குறித்து தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மலேசிய அரசின் இந்த நடடிக்கையை மற்ற நாடுகள் ஏற்கிறதா, இல்லையா என்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.
இதற்கு மற்ற நாடுகளின் ஒப்புதல் தேவை என்றும் நாங்கள் கருதவில்லை. நாங்கள் எடுத்த நடவடிக்கையை வெளிநாடுகளுக்குத் தெரிவித்துள்ளோம். இதை ஒரு தகவலாகத்தான் நாங்கள் தெரிவித்துள்ளோம். இதை கடமையாக கருதி நாங்கள் செய்யவில்லை.
மலேசிய மக்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் மட்டுமே நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், அவர்கள் மட்டுமே எங்களை கேள்வி கேட்க முடியும்.
மலேசியாவில் அமலில் உள்ள உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் பிற வளர்ந்த நாடுகளில் உள்ள சட்டத்தை விட கடுமையானது அல்ல. குறிப்பாக அமெரிக்காவின் பேட்ரியாட் சட்டத்தை விட கடுமையானது அல்ல.
சில நாடுகள், பிற நாடுகளின் விவகாரங்களில் அக்கறை காட்டுகிறார்கள். ஆனால் அவர்களது நாடுகளில் நடக்கும் விஷயங்களை அவர்கள் கவனிப்பதில்லை.
ஈராக்கிலும், குவாண்டனாமா சிறையிலும் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலைப்பட வேண்டும்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ஒரு தடுப்பு நடவடிக்கைக்கான சட்டம் ஆகும். பாதகமான செயல்கள் நடப்பதற்கு முன்பே தடுப்பதற்காகத்தான் இந்த சட்டம் என்றார் அல்பார்.
60ம் ஆண்டுளில் மலேசியாவில் கம்யூனிச இயக்கம் தலை எடுத்தது. அதை ஒடுக்க கொண்டு வரப்பட்டதுதான் இந்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம். ஆனால் இந்த சட்டத்திற்கு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் கடும் எதிர்ப்புகள் அன்று முதல் இன்று வரை உள்ளன.
அடிப்படை மனித உரிமைகளை முடக்கிப் போடும் இந்த சட்டத்தை ஒழிக்கவ வேண்டும் என பல்வேறு நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் மலேசிய அரசை வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் மீதான மலேசிய அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை அமெரிக்க அரசு கடந்த வாரம் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.