இந்திய ராணுவ குழு இலங்கை பயணம் - புதிய உதவிகளை வழங்குகிறது
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தீவிரமாக இறங்கியிருக்கும், இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு உதவிகள் வழங்குவதற்காக இந்திய பாதுகாப்புத் துறை நிபுணர்கள் குழு இன்று இலங்கை செல்கிறது.
இலங்கைக்கு இந்தியா ராணுவ ரீதியில் எந்த உதவியையும் செய்யக் கூடாது என்று தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் இந்தியா ஆயுத உதவிகளை வழங்காவிட்டால், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் உதவிகளைப் பெறவோம் என ராஜபக்சே அரசு இந்தியாவை மிரட்டியது.
சொன்னதோடு நில்லாமல் பாகிஸ்தான், சீன நாட்டு ஆயுதங்ளையும் அது வாங்கிக் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில், இலங்கை விமானப்படைக்குத் தேவையான பல ஆயுத உதவிகள் கிடைத்துள்ளன. சீனாவும் நவீன ஆயுதங்களை இலங்கைக்கு கொடுத்துள்ளது.
இதையடுத்து இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு இலங்கைக்கு ஆயுத உதவிகளை செய்து வருகிறது. அதி நவீன கண்காணிப்பு ரேடார்கள் உள்ளிட்டவற்றை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது. மேலும் விமானப் படைக்குத் தேவையான பல உதவிகளையும் இந்தியா செய்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கம் சமீபத்தில் விமானப் படையை உருவாக்கியது. உலகிலேயே ஒரு போராளி இயக்கம் விமானப்படையைப் பெற்றது இதுவே முதல் முறை என்பதால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விடுதலைப் புலிகளின் விமானப் படையை இந்தியாவும் எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில், புலிகளின் விமான படையை எதிர்த்து போரிட தேவையான உதவிகளை இலங்கை விமானப்படைக்கு இந்தியா அளித்துள்ளது.
மேலும் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை அரசுக்கு மேலும் உதவிகள் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கவும், இலங்கை படைகளுக்கு தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளை அளிக்கவும், அதுகுறித்த ஆலோசனைகளுக்காவும் இந்திய பாதுகாப்பு குழு இன்று கொழும்பு செல்கிறது.
3 நாட்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய பாதுகாப்பு குழுவில் விமான பாதுகாப்பு நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ரஷியாவிடமிருந்தும் ஆயுதம் வாங்கும் இலங்கை:
இதற்கிடையே, ரஷ்யாவிடமிருந்தும் இலங்கை அரசு ஆயுதங்களை வாங்கிக் குவிக்கவுள்ளது.
ஏற்கனவே ரஷ்ய பாதுகாப்பு குழு ஒன்று கொழும்புக்கு வந்துள்ளது. இன்று இந்தியக் குழு வருகிறது. இரு குழுக்களுடனும் இலங்கை பாதுகாப்புத் துறையினர் ஆயுதங்கள் கொள்முதல் செய்வது குறித்து விரிவாகப் பேசவுள்ளனர்.












Click it and Unblock the Notifications