சக டிரைவர், க்ளீனரை கடித்துக் குதறிய லாரி டிரைவர்
சென்னை: சென்னையில் நடு சாலையில் லாரியை நிறுத்தி விட்டு உடன் அமர்ந்து வந்த இன்னொரு டிரைவரையும், க்ளீனரையும், லாரி டிரைவர் கடித்துக் குதறியதாலும், சாலையில் சென்றவர்களையும் கடிக்கப் பாய்ந்ததாலும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த டிரைவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவரின் லாரி நிறுவனத்தில் டிரைவராக இருந்து வருகிறார்.
நேற்று மும்பையிலிருந்து இரும்பு பாரத்துடன் சென்னைக்கு வந்தார். மண்ணடியில் உள்ள நிறுவனம் ஒன்றில் சரக்கை இறக்கி விட்டு பூந்தமல்லி திரும்பினார்.
லாரியில் அவருடன் இன்னொரு டிரைவர் முருகன், க்ளீனர் பழனி ஆகியோர் இருந்தனர். அப்போது திடீரென வியாசர்பாடி சர்மா நகர் அருகே லாரியை நடு சாலையில் நிறுத்தினார்.
பின்னர் முருகனையும், பழனியையும் சரமாரியாக கடிக்க ஆரம்பித்தார். இருவரும் அதிர்ந்து போய் வலியால் துடித்தனர். இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர், செல்வராஜின் பிடியிலிருந்து இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களையும் கடிக்கப் பாய்ந்தார் செல்வராஜ்.
இதனால் அங்கு பெரும் பீதி ஏற்பட்டது. சிலர் துணிச்சலாக செயல்பட்டு செல்வராஜைப் பிடித்து கட்டிப் போட்டனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து செல்வராஜை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை நாய் ஏதாவது கடித்து ரேபிஸ் வந்திருக்கிறதா அல்லது மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து டாக்டர்கள் ஆய்ந்து வருகின்றனர்.
செல்வராஜிடம் கடிபட்ட இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள்ளனர்.












Click it and Unblock the Notifications