பாஜகவின் பொய் வாக்குறுதிகள்-பிரதமர்
பிலாஸ்பூர்: சாதனைகளை கூறி வாக்குக் கேட்க பாஜகவிடம் ஒன்றும் இல்லாததால் பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து பிரசாரம் செய்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இமாசல பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் பிரதமர் பேசியதாவது,
எப்பொழுதெல்லாம் இமாசலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது இம்மாநிலத்தின் வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்படுகிறது. மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும், பிராந்திய பிரச்சனைகளை பாஜக பிதானமாக பேசுகிறது.
பொருளாதார வளர்ச்சியில் அக்கட்சி எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததை மறைப்பதற்காக இத்தகைய பிரசாத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது.
கடந்த 1966ம் ஆண்டு இமாசலப் பிரதேசம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அப்போதிலிருந்து எப்போதெல்லாம் பாஜக ஆட்சி நடைபெற்றதோ அந்த காலகட்டத்தில் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்பட வில்லை. சாதனைகளைக் கூறி வாக்கு கேட்க அக்கட்சியிடம் ஒன்றும் இல்லை. அதனாலேயே பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறது. அதை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது.
இம்மாநில வளர்ச்சிக்காக ஆரம்பத்திலிருந்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இதனாலேயே இந்தி பேசும் மாநிலங்களில் மிகச் சிறந்த வளர்ச்சியடைந்த மாநிலமாக உயர்ந்த நிலையை இமாசலப் பிரதேசம் எட்டியுள்ளது.
40 வருடங்களுக்கு முன்னர் இந்த மாநிலத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை 20 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் கடுமையான உழைப்பும், தற்போது மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உதவியாலும், இந்த மாநிலம் 9.5 சதவீத வளர்ச்சியை கடந்த ஆண்டு எட்டியுள்ளது.
இதே வளர்ச்சி தொடர காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது சீரான வளர்ச்சியை பெற்றது. ஆனால் பாஜக ஆட்சிக் காலத்தில் அது அப்படியே நின்று போனது. இம்மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு தாராளமாக உதவும்படி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
இங்கு தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை உள்ளிட்ட பல சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. கிராமப்புற வேலை உத்தரவாத திட்டம் 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றின் காரணமாக மாநிலம் பொருளாதார வளர்ச்சியை சீராக எட்டி வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் இமாசலப் பிரதேசத்திற்கு ரூ.27,000 கோடி முதலீடு வந்துள்ளது. இதன் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும் இங்கு ஒரு மத்திய பல்கலைக்கழகமும், ஐஐடியும் அமைக்கப்படும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications