கோவை குண்டுவெடிப்பு: ஆயுள் தண்டனையை எதிர்த்து 42 பேர் மேல்முறையீடு
கோயம்புத்தூர்: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 42 பேரும் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது கேரள மக்கள் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி, அல்-உம்மா இயக்கத் தலைவர் பாஷா, செயலாளர் அன்சாரி உட்பட 166 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு கோவை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த கடந்த செப்டம்பர் மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பில் மதானி உள்பட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டதால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
83 பேருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் அனைவரும் விசாரணை காலத்திலேயே இந்த தண்டனையை அனுபவித்து விட்டதால் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் அல்-உம்மா இயக்கத் தலைவர் பாஷா, செயலாளர் அன்சாரி உட்பட 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தீர்ப்பு நகல் அளிக்கப்பட்டது. அல்-உம்மா தலைவர் பாஷாவை தவிர்த்து, ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தங்கள் மீதான தீர்ப்பை எதிர்த்து அன்சாரி உட்பட 42 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
83 கைதிகள் மறுவாழ்வு நிதி கேட்டு கோரிக்கை:
இதற்கிடையில் சிறையில் ஏற்கனவே தண்டனை காலத்தை அனுபவித்ததால் விடுதலை செய்யப்பட்ட கைதிகள் 83 பேரும் தங்களின் மறுவாழ்வுக்கு தமிழக அரசு நிதியுதவி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களில் பலர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளனர். ஆனால் சிறைக்கு வந்த பின்னர் அனைத்தும் நொடித்து விட்டதாகவும், அதனால் தற்போது கூலி வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால், எங்கள் பழைய தொழிலை தொடங்க நிதியுதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட 83 பேருக்கும் தமுமுக மற்றும் ஐக்கிய ஜமாத் சார்பில் தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போராட்டம் நடத்துவோம்:
சிறையில் இருக்கும் போது விடுதலையானவுடன் எங்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கு கடன் உதவி அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உறுதி அளித்தபடி எங்களுக்கு கடன் உதவியோ அல்லது நிதி உதவியோ கொடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications