ஜெயலலிதாவின் 'ரிமோட் கண்ட்ரோல்' அரசியல்-நடராஜன் தாக்கு
கோயம்புத்தூர்: திரைமறைவில் இருந்து கொண்டு ரிமோட் கண்ட்ரோல் அரசியலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நடத்தி வருகிறார் என்று ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பொதுமக்களை நேரடியாக சந்தித்து அரசியல் நடத்த வேண்டும். ஆனால், திரைமறைவில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் அரசியல் நடத்தி வருகிறார் ஜெயலலிதா. எம்.எல்.ஏக்களை ஏவி விட்டு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகிறார்.
மக்களை நேரடியாக சந்திப்பதில்லை. இந்தத் திரைமறைவு அரசியல் நீடிக்காது. மக்கள் பணிக்கும், சமூக பணிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகளையே மக்கள் நம்புவார்கள்.
கொடி இல்லாமல், முத்திரை இல்லாமல் மக்களுக்காக இயங்கும் கட்சியாக இருக்க வேண்டும். எங்கு பார்த்தாலும், கொடிக் கம்பத்தை நட்டு அரசியல் கட்சிகள் அசிங்கம் செய்து வருகின்றன. கொடிகளே இருக்கக் கூடாது.
கொடிகளே இல்லாமல் புதியதொரு கட்சியை விரைவில் நான் துவக்குவேன். என் கட்சியில் இணைபவர்கள், தங்கள் சொத்துக்களை அரசிடமோ, மக்களிடமோ ஒப்படைக்க வேண்டும். அரசு பணத்தை கொள்ளையடிக்க மாட்டேன் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும்.
அந்த தைரியம் எந்த அரசியல் கட்சிக்காவது தமிழகத்தில் இருக்கிறதா. அது போன்ற கட்சிக்குத்தான் மக்களிடம் செல்வாக்கு அதிகம் இருக்கும்.
என்னைச் சந்திக்க வரும் அதிமுகவினரை கட்சியை விட்டு நீக்கி வருகிறார் ஜெயலலிதா. இதனால் எனக்கு ஆட்களின் பலமும், ஆதரவும் அதிகரித்து வருகிறது. என்னை நேரடியாக எதிர்த்து பேசக்கூடிய தைரியமோ, என்னை எதிர்த்து அறிக்கை விடவோ அவரால் முடியாது.
ஏனென்றால் என்னிடம் எல்லா விஷயத்திற்கும் ஆதாரம் உள்ளது என்றார் நடராஜன் மிரட்டலாக.












Click it and Unblock the Notifications