சோனியா காந்தி பதவிக்கு ஆசைப்பட்டதில்லை-ஜி.கே.வாசன்
விழுப்புரம்: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பதவிக்கு ஆசைப்பட்டது இல்லை என்று மத்திய இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள பெரும்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி விழாவில் பேசியதாவது,
மத்தியில் அமைந்துள்ள கூட்டணி மக்களால் ஏற்படுத்தப்பட்ட கூட்டணியாகும். இந்த கூட்டணி சார்பில் பிரதமர் பதவிக்கு சோனியா முன் நிறுத்தப்பட்டார்.
அவ்வளவு முக்கியத்துவம் பெற்ற பதவியை வேண்டாம் எனக்கூறி மன்மோகன் சிங்குக்கு அவர் வழங்கினார். சோனியா என்றும் பதவிக்கு ஆசைப்பட்டதே இல்லை.
நகரங்கள் வளர்ச்சி பெற்றுள்ளதை போல கிராமங்கள் அனைத்தும் முன்னேற வேண்டும் என்று மத்திய அரசு திட்டங்களை அமலாக்கி வருகின்றது.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என அனைத்து சமுதாயத்துக்கும் ஏற்ற வகையில் மத்திய அரசின் திட்டங்கள் அமைந்துள்ளது.
அதனை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அதனால் தான் மக்கள் ஆட்சியாக விளங்குகிறது. கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.1 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை காங்கிரஸ் கட்சியினருக்கு உள்ளது. அவ்வாறு எடுத்துச் சொன்னால் காமராஜர் நினைத்தபடி தமிழகத்தில் காங்கிரஸ் விரைவில் ஆட்சி அமைக்கும். அதற்கு இளைஞர்கள் துடிப்பாக செயல்படவேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications