மலேசியா: குடும்பத்தினருடன் பேச சிறையில் உள்ள 5 தமிழர்களுக்கு அனுமதி
கோலாலம்பூர்: உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்களையும், அவர்களுடைய குடும்பத்தினர் சந்தித்துப் பேச மலேசிய அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.
மலேசியாவில் சம வாய்ப்பு கோரி போராட்டத்தில் குதித்துள்ள இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) சட்ட ஆலோசகர் உதயக்குமார், கங்காதரன், மனோகரன், வசந்தகுமார், கணபதிராவ் ஆகிய 5 பேர் சமீபத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கோலாலம்பூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கமுண்டிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களைப் பார்க்க அவர்களது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்படும் என மலேசிய உள்துறை துணை அமைச்சர் பூ ஆ கியோ கூறியுள்ளார்.
இதுகுறித்து பூ ஆ கியோ கூறுகையில், பிற கைதிகளைப் போலவே ஹிண்ட்ராப் தலைவர்களும் நடத்தப்படுவர். அவர்களை, அவர்களது குடும்பத்தினர், விதிமுறைகளின்படி முன்கூட்டியே விண்ணப்பித்து விட்டுப் போய் பார்க்கலாம். அவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி தரப்படும் என்றார்.
கைது செய்யப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து தமிழர்களுக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காலவரையின்றி சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச போலீஸ் உதவியை நாடும் மலேசியா:
இதற்கிடையே, மலேசியா வாழ் தமிழர்களை கண்காணிக்க சர்வதேச போலீஸின் உதவியை மலேசியா அரசு நாடவுள்ளது.
இன்டர்போல், ஈரோபோல் உள்ளிட்ட சர்வதேச போலீஸின் உதவியை நாடவுள்ளது மலேசியா. மேலும், ஹிண்ட்ராப் அமைப்பின் நிறுவன தலைவர்களில் ஒருவரான வேதமூர்த்தி தற்போது உலக நாடுகளின் ஆதரவைப் பெற சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதால் அவரைப் பிடிக்கவும் இன்டர்போல் உதவியை மலேசிய அரசு நாடவுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications