கருணாநிதி-அச்சுதானந்தன் இன்று சந்திப்பு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியும், கேரள முதல்வர் அச்சுதானந்தனும் இன்று இரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள மாநில முதல்வர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தார். இதை கருணாநிதி ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இன்று இரவு இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று இரவு 7.30 மணியளவில் தமிழ்நாடு இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இதில் கேரளா சார்பில் அச்சுதானந்தனுடன், அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் பங்கேற்கிறார். தமிழக அரசுத் தரப்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கிறார்.
கூட்டத்திற்குப் பின்னர் இரு மாநில முதல்வர்களும் தனித் தனியே செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தின்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அதிகரிப்பது மற்றும் கேரள அரசின் புதிய அணைத் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.