பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு
டெல்லி: டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் நடைபெறவுள்ள அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி டெல்லி சென்றுள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், டெல்லியில் இன்று தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில், அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்கிறார்கள். இதுதவிர, பிரதமர் தலைமையில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றிய முதல் அமைச்சர்களின் மாநாடு நாளை நடைபெறுகிறது.
இந்த இரு நிகழ்ச்சிகளிலும் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
முன்னதாக டெல்லி போய்ச் சேர்ந்த முதல்வர் கருணாநிதியை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பழனி மாணிக்கம், எஸ்.ரகுபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ராதிகா செல்வி உட்பட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.
மேலும் டெல்லி வாழ் தமிழர்கள் மற்றும் ஏராளமான திமுகவினர் திரளாக கூடி வரவேற்றனர்.
பின்னர் சாணக்கியபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு வந்த கருணாநிதி அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் பிரதமரை மாலை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்தார்.
அப்போது அமைச்சர் டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், தமிழக தலைமைச் செயலாளர் திரிபாதி ஆகியோர் உடனிருந்தனர்.
பிரதமருடன் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கருணாநிதி ஆலோசனை நடத்திய பின்னர் இரவு தமிழ்நாடு இல்லம் திரும்பினார்.












Click it and Unblock the Notifications