அல் கொய்தா தீவிரவாதி வருவதாக வதந்தி- சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை: துபாயிலிருந்து சென்னை வரும் விமானத்தில் அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி வருவதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இது வெறும் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது.
சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய வேலூரைச் சேர்ந்த சங்கர் என்ற நபர் துபாயிலிருந்து வரும் விமானத்தில் கபீர் முகம்மது மரைக்காயர் என்பவர் வருகிறார். அவர் ஒரு அல்-கொய்தா தீவிரவாதி என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான நிலையத்திற்குத் தகவல் தரப்பட்டு உஷார்படுத்தப்பட்டது.
அல்-கொய்தா தீவிரவாதியைப் பிடிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டிருந்தனர்.
கியூ பிரிவு போலீஸாரும், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும் துபாயிலிருந்து வரும் விமானங்களை தீவிரமாக கண்காணித்தனர்.
துபாயிலிருந்து வந்த இரு விமானங்களில் மரைக்காயர் (54) இல்லை. ஆனால் எமிரேட்ஸ் விமானத்தில் அவர் இருந்தார்.
இதையடுத்து அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர் கடலூரைச் சேர்ந்தவர் என்றும் துபாயில் கடந்த 20 வருடங்களாக மதரசா ஒன்றில் ஆசிரியராக இருப்பவர் என்றும், அவருக்கும் அல் கொய்தாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிய வந்தது.
பக்ரீத் கொண்டாடுவதற்காக தனது மனைவியுடன் அவர் வந்தார் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
தவறான தகவலைத் தெரிவித்த சங்கருக்கு தற்போது போலீஸார் வலை விரித்துள்ளனர். முன் விரோதம் காரணமாக அவர் இப்படி ஒரு தவறான தகவலை சங்கர் தெரிவித்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.