அமைச்சர்கள் எப்படி சம்பாதித்தார்கள்-விஜயகாந்த்

தனது விருத்தாசலம் தொகுதிக்கு வந்த விஜய்காந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எனக்கு நேர்மையாக இருப்பது பிடிக்கும். எனக்கு என் பலம் தெரியும். அதனால்தான் நான் தனியாக நின்று போராடி வருகிறேன்.
இப்போது இளைஞர் அணி மாநாடு நடத்த அவசியம் என்ன வந்தது. இவ்வளவு பாரம்பரியமிக்க கட்சியில் இத்தனை இளைஞர்கள் உள்ளனர் என்று மக்களுக்கு காட்டவா. இலவசமாக பேட், சர்ட், ஷூக்கள் கொடுத்தால் நிச்சயம் கூட்டம் வரும்.
இந்த ஆட்சி வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. கல்வித் திட்டம் சரியில்லை. உயர்கல்வி முதல் ஆரம்ப கல்வி வரை குதிரை கொம்பாக இருக்கிறது. 10 பேரில் 5 பேருக்கு எழுத படிக்க தெரியவில்லை.
தமிழகம் முழுவதும் கடும் மின்சார பற்றாக்குறை நிலவுகிறது. தொலை நோக்கு திட்டம் இல்லை. இதனைப் பற்றி கேட்டால் பல காரணம் சொல்கிறார்கள். எங்களுக்கு காரணம் தேவையில்லை. உற்பத்தியை பெருக்க வழிவகை செய்ய வேண்டும். 30 கோடி இளைஞர்களுக்கு அரசு என்ன திட்டம் வைத்துள்ளது.
விவசாயிகள் பிரச்சனை, மக்கள் தொகை பெருக்கம் என பல பிரச்சனை உள்ளன. ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு அரசு இளைஞர் அணி மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறது. அது கட்சி மாநாடா அல்லது அரசு மாநாடா என்று தெரியவில்லை. இந்த இளைஞர்களை இன்று விஜயகாந்த் வந்தவுடன்தான் கண்ணுக்கு தெரிகிறதா.
நெய்வேலியில் 64 கிராம மக்கள் வீடு, வேலை வாய்ப்பு கேட்டு போராடி வருகிறார்கள். அரசு முன்பு என்ன ஒப்பந்தம் போட்டுள்ளது என்பது தெரியவேண்டும். கனிம வளம் மத்திய அரசுக்கும், நீர்வளம் மாநில அரசுக்கும் சொந்தம் என்கின்றனர்.
இது என்ன நியாயம். இதனால்தான் நீர் பங்கீடு பிரச்சனைகள் ஏற்படுகிறது. கனிம வளத்தை மாநில அரசுக்கு சொந்தமாக்க வேண்டும். நெய்வேலி பிரச்சனையில் அமைச்சர்கள் பல கோடி ரூபாய் பினாமி பெயரில் ஊழல் செய்துள்ளனர். ஆனால் நான் நெய்வேலி சென்றால் நெய்வேலி விருந்தினர் மாளிகையில் கூட தங்குவதில்லை. தனியார் விடுதியில் தான் தங்குவேன்.
விருத்தாசலத்தில் எனது சொந்த செலவில் செய்து கொடுத்த சாலைத் தடுப்புகளைக் கூட வைக்க மறுக்கின்றனர். கொஞ்ச நாள் அவகாசம் கொடுக்கிறேன், அதை வைக்கவிலலை என்றால் நானே அரசை எதிர்த்து போராட போகிறேன்.
தமிழகம் முழுவதும் ரோடுகள் படுமோசமாக உள்ளன. நான் தொகுதிக்கு வந்தாலே அதிகாரிகள் யாரும் அலுவலகத்தில் இருப்பதில்லை. என்னை கண்டாலே அதிகாரிகள் பயப்படுகின்றனர்.
சுகாதாரம் சுத்தமாக இல்லை. அரசு மருத்துவமனைக்கு சென்றால் மருந்து, மாத்திரை இல்லை. ஸ்கேன் வசதி இல்லை. எங்கு சென்றாலும் பணம், பணம் என பிடுங்குகின்றனர்.












Click it and Unblock the Notifications