For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரியாறு: கருணாநிதி - அச்சுதானந்தன் பேச்சு வார்த்தை தோல்வி

By Staff
Google Oneindia Tamil News

Achuthanandan

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள முதல்வர்களுக்கிடையே நேற்று இரவு டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. மீண்டும் சந்தித்துப் பேச இரு தரப்பும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக, கேரள முதல்வர்கள் டெல்லி வந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரு முதல்வர்களும் சந்தித்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பேசலாம் என பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்தார்.

இதை இரு முதல்வர்களும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து நேற்று இரவு ஏழரை மணியளவில் தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் கருணாநிதி மற்றும் அச்சுதானந்தன் இடையிலான பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த கூட்டத்தில், தமிழக அரசுத் தரப்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் திரிபாதி உள்ளிட்டோரும், கேரள தரப்பில் முதல்வர் அச்சுதானந்தனுடன், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸும் பேச்சுவார்த்தையின்போது உடன் இருந்தார்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின்போது இரு மாநிலங்களும் தங்கள் தரப்பு வாதங்களில் உறுதியாகவும், திடமாகவும் இருந்தன. இதனால் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறுகையில், எந்த ஒப்பந்தமும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. இதயப்பூர்வமாக நடந்தது. மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும் என்றார்.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், முதல்வர்கள் மட்டத்தில் நடந்த இந்த கூட்டத்தில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

கேரள முதல்வர் அம்மாநில நிலையில் பிடிவாதமாக இருந்தார். நமது முதல்வர் தமிழகத்தின் கருத்துக்களை எடுத்து வைத்தார். தொடர்ந்து பேச இரு தரப்பும் தீர்மானித்துள்ளன என்றார்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அச்சுதானந்தன் கிளம்பிச் சென்றவுடன், மத்திய அமைச்சர் சைபுதீன் சோஸ், முதல்வர் கருணாநிதியுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் கேரளா ஹவுஸ் வந்த முதல்வர் அச்சுதானந்தன் அங்கு செய்தியாளர்களிடம் விரிவாகப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணையில் ஏற்படும் நீர் கசிவு குறித்து முக்கியமாக கவலை தெரிவித்தோம். இதுகுறித்து மத்திய நீர் ஆணையம் உரிய ஆய்வை மேற்கொள்ளும் என்று நம்புகிறோம்.

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் கேரள அரசின் முடிவு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. அதுகுறித்த தமிழகத்தின் பதிலை தமிழக முதல்வர் எழுத்துப்பூர்வமாக தெரிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X