ஜனவரி-3ல் அதிமுக செயற்குழு கூட்டம்- ஜெ. அறிவிப்பு
சென்னை: அதிமுக செயற்குழுக் கூட்டம் ஜனவரி 3ம் தேதி நடக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக செயற்குழுக் கூட்டம், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில், ஜனவரி 3ம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறும்.
கூட்டத்திற்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குவார்.
செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியாக அழைப்புகள் அனுப்பப்படும். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது அழைப்புக் கடிதத்துடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
முக்கிய அறிவிப்பு:
ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் யார் என்பதில் தோழி சசிகலாவுக்கும், அவரது உறவினர் இளவரசிக்கும் இடையே கடும் பனிப்போர் நடந்து வருகிறது.
இந்தப் பனிப்போரில் சிக்கி சசிகலா ஆதரவாளர்கள் பலரது தலைகள் உருண்டு வருகின்றன. குறிப்பாக நடராஜனுக்கு ஆதரவாக இருப்போரை கட்சியிலிருந்து தூக்கி வருகிறார் ஜெயலலிதா.
இதவரை இருந்து வந்த சசிகலாவின் ஆதிக்கம் மெல்ல மெல்ல தகர்ந்து வரும் நிலையில், புதிய சக்தியாக இளவரசி உருவெடுத்து வரும் பின்னணியில் அதிமுக செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இதில் இளவரசிக்கு முக்கிய பதவி வழங்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.
மேலும் திமுகவின் அடுத்த வாரிசாக நெல்லையில் வைத்து முடி சூட்டப்பட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். மறுபக்கம் விஜயகாந்த் பின்னால் பெரும் திரளான இளைஞர்களும், எம்.ஜி.ஆர். விசுவாசிகளும் போய்க் கொண்டுள்ளனர். சரத்குமார் பின்னால் தென் மாவட்டங்களில் நாடார் சமூக மக்கள் திரண்டு வருகின்றனர்.
இந்தப் பின்னணியில் அதிமுகவை பலப்படுத்தும் நோக்கிலும், லோக்சபாவுக்கு திடீர் தேர்தல் வந்தால் தயாராகும் வகையிலும் பல புதிய திட்டங்களை இந்த செயற்குழுக் கூட்டத்தில் ஜெயலலிதா அறிவிக்கக் கூடும். பல முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications