நீதிமன்றத்துக்கு வந்த முதியவர் அவமானம் தாங்காமல் சாவு
சங்கரன்கோவில்: முதன்முதலாக நீதிமன்றத்துக்கு வந்த 92 வயது முதியவர் அவமானத்தால் தாங்காமல் இறந்து விட்டார்.
திருவேங்கடம் அருகே உள்ள அய்யநேரியை சேர்ந்தவர் கரியமால் மகன் வெங்கட் ராமானுஜத்துக்கும், திருவேங்கடம் அருகே செவல்குளத்தை சேர்ந்த சன்னாசி மகள் சீதாலட்சுமிக்கும் 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
வெங்கட் ராமானுஜம் ஓசூரில் டீக்கடை நடத்தி வருகிறார். அவரின் தந்தை கரியமால் நிலக்கிழாராக இருக்கிறார்.
வெங்கட் ராமானுஜம்-சீதாலட்சுமி தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். பின்னர் மனைவியுடன் தன்னை சேர்ந்து வைக்க கோரி வெங்கட்ராமனுஜம் சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் சேர்ந்து வாழ கூறி தீப்பளித்தார். ஆனால் இருவரும் சேர்ந்து வாழாமல் பிரிந்தே இருந்தனர்.
இந்நிலையில் கணவர் வெங்கட் ராமனுஜம், மாமனார் கரியமால் மற்றும் கணவரது சகோதர, சகோதரிகள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக திருவேங்கடம் போலீசில் சீதாலட்சுமிபுகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.
தங்கள் மீது வரதட்சணை புகார் கொடுத்ததை அறிந்த ராமானுஜம், சீதாலெட்சுமியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு பதிலடியாக சீதாலெட்சுமி தனது கணவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து விட்டதாகவும், தனது மகளுக்கு ஜீவனாம்சம் கேட்டு சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக கரியமால், வெங்கட்ராமனுஜம், சகோதர, சகோதரிகள் உள்பட 8 பேர் ஒரு காரில் நீதிமன்றத்துக்கு வந்தனர். காரை விட்டு இறங்க முடியாக அளவுக்கு முதுமையால் தள்ளாடிய கரியமாலை நீதிமன்றத்தில் இருந்து பார்த்த மாஜிஸ்திரேட் பார்த்தசாரதி அவர் இறங்க வேண்டாம் என்றும் வழக்கிற்கு வாய்தா அளிப்பதாகவும், அடுத்த வாய்தாவிற்கு கூட கரியமால் ஆஜாராக தேவையில்லை என்றும் கூறினார்.
இதையடுத்து அனைவரும் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் புறப்பட்ட 15 நிமிடத்தில் கரியமால் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்வதற்கு முன்பாகவே கரியமால் இறந்துவிட்டார்.