ஜாதி சான்றிதழ் வழங்குவதில் மத்திய அரசு குளறுபடி-திருமா
தர்மபுரி: தமிழகத்தில் உள்ள பல்வேறு இனத்தினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதில் மத்திய அரசு குளறுபடி செய்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
தாழ்த்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை பெறுவது தொடர்பாக விதிக்கப்பட்ட புதிய அரசாணையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
தமிழகத்தில் உள்ள இருளர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட பல்வேறு இனத்தினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதில் அரசு குளறுபடி செய்கிறது. இதுகுறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
பழங்குடியினருக்கு தனி அமைச்சகம், தனி எம்பி தொகுதி அமைக்க வேண்டும். குறவர் சமுதாயத்தின் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை போலீசார் திரும்பப் பெற வேண்டும்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எந்த கருத்தும் கூறக் கூடாது என சில அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது, உணர்வை வெளிப்படுத்துவது என்பது தனி மனித ஜனநாயக உரிமையாகும்.
தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது குற்றம் ஆகாது என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது என்றார் திருமாவளவன்.