சேது திட்டத்தால் தென் தமிழகம் வளராது-விஎச்பி
கும்பகோணம்: தென் தமிழகம் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய வேண்டும் என்பதை பற்றி கருணாநிதி சிந்திக்கவேயில்லை என்று விஷ்வ இந்து பரிசத்தின் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நெல்லையில் நடைபெற்ற திமுக மாநாட்டிலும், அதற்கு பின்னரும் சேது கால்வாய் திட்டம் பற்றியும், அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் முதல்வர் கருணாநிதி பேசி வருகிறார்.
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பதைவிட, கடவுள் மறுப்பு கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்பதில் கருணாநிதி தீவிரமாக உள்ளார். தென் தமிழகம் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய வேண்டும் என்பதை பற்றி அவர் சிந்திக்கவேயில்லை.
சேது திட்டம் பற்றி ஆராய்ந்த பல நிபுணர்கள், அந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் எந்தவொரு வளர்ச்சியோ, பயனோ ஏற்பட போவதில்லை என தகுந்த ஆதாரங்களுடன் ஆய்வுகள் வெளியிட்டுள்ளனர். அதை முழுவதும் உணர்ந்த மத்திய அரசு சேது திட்டத்தை நிறைவேற்றுவதில் இருந்து தற்போது பின்வாங்கியுள்ளது.
மாறாக இத்திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் என்றால் சேது கால்வாய் அவர்களது நோக்கமாக இருக்காது. ராமர் பெயரில் உள்ள இடத்தை அழிக்க வேண்டும் என்பது தான் உள் நோக்கமாகும். ராமர் பாலத்துக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் கூட, காங்கிரஸ் கட்சிக்கு பெருமளவில் பாதகம் ஏற்படும் என்பது அவர்களுக்கே தெரியும்.
உண்மையிலேயே தமிழகத்தின் தென்பகுதி பொருளாதார வளர்ச்சியடைய வேண்டும் என்று கருணாநிதி விரும்பினால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமர் ஆகிய 6 மாவட்டங்களை சிறப்பு பொருளாதார மண்டலங்களாக அறிவிக்கவேண்டும்.
இந்த மாவட்டங்களில் இருந்து கிடைக்கும் மீன்களின் மூலம் வருடத்திற்கு ரூ.2,000 கோடி ஏற்றுமதி நடைபெறுகிறது. மீன்வளத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து மீன்பிடி துறைமுகங்களை இம்மாவட்டங்களில் அமைத்தால் ரூ.10,000 கோடி வரை ஏற்றுமதியின் அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர் என்றார் வேதாந்தம்.