வருசநாட்டில் பிடிபட்ட 2 நக்சலைட்டுகள் சிறையில் அடைப்பு
மதுரை: தேனி மாவட்டம் வருசநாட்டு மலைப் பகுதியில் போலீஸாரிடம் சிக்கிய 2 நக்சலைட்டுகள் ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வருசநாடு மலைப் பகுதியில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று முன்தினம் நடத்திய அதிரடி வேட்டையில் 5 நக்சலைட்டுகள் சிக்கினர். இவர்களில் நக்சலைட் கும்பலின் தலைவன் பழனி என்கிற மகாலிங்கம், மருது, முருகானந்தம் ஆகியோர் துப்பாக்கிக் குண்டு பட்டு காயமடைந்தனர். மூன்று பேரும் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டீஸ்கரைச் சேர்ந்த யோகேஷ் என்கிற சச்சின் மற்றும் பாலமுருகன் ஆகியோர் போலீஸாரிடம் சரணடைந்தனர்.
இவர்கள் இருவரையும் தீவிரமாக விசாரித்த பின்னர் ஆண்டிப்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். பலத்த பாதுகாப்புடன் நீதிபதி சுந்தரய்யா முன்பு இருவரையும் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவர்கள் இருவரையும் ஜனவரி 3ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஒருவரை புதுக்கோட்டை சிறையிலும், இன்னொருவரை மதுரை மத்திய சிறையிலும் போலீஸார் கொண்டு போய் அடைத்தனர்.