தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது: எஸ்.ஆர்.பி.
திருச்சி: தமிழத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
திருச்சி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமாக உள்ளது. இதை சரிப்படுத்த முதல்வர் கருணாநிதி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் விநியோகத்தை சரிவர கையாளாத காரணத்தால்தான் தமிழகத்தில் பெரும் மின் பற்றாக்குறையும், மின் வெட்டும் ஏற்பட்டுள்ளது. மின் பகிர்மான கட்டமைப்பை சரிவர நிர்வகிக்கத் தவறியதே இதற்குக் காரணம்.
தமிழகத்தில் நடமாடும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மீது அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழையினால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நிவாரண உதவிகளையும், மறு சீரமைப்புப் பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும். விவசாயிகள்தான் இந்த மழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.