வெள்ளத்தில் மதுரை - சென்னை சாலை துண்டிப்பு: போக்குவரத்து பாதிப்பு
மதுரை: மதுரை அருகே கொட்டாம்பட்டி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் புகுந்து துண்டிக்கப்பட்டதால், சாலை போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. சிவகங்கை வழியாக பேருந்துகள் திருப்பி விடப்பட்டுள்ளன.
மதுரை மாவட்ட எல்லையான கொட்டாம்பட்டியில், காட்டாற்று வெள்ளத்தால் சாலை துண்டிக்கப்பட்டு கடல் போல தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது.
சென்னைக்குச் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை என்பதால் இந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையிலிருந்தும், மதுரை வழியாகவும் சென்னை, திருச்சி செல்லும் பேருந்துகள் அனைத்தும் சிவகங்கை வழியாக நீண்ட சுற்றுப் பாதையில் திருப்பி விட்டுள்ளன.
தண்ணீர் திபு திபுவென ஓடிக் கொண்டிருப்பதாலும், சாலை மிகவும் மோசமாக சேதமடைந்திருப்பதாலும் இந்தப் பாதைய சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ரயில்கள் தொடர்ந்து தாமதம்:
திண்டுக்கல் அருகே தண்டவாளங்களில் தேங்கியுள்ள மழை நீர் இன்னும் அகலாமல் இருப்பதால், தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் இன்றும் பல மணி நேரம் தாமதமாக வந்துசேர்ந்தன.
கன மழை காரணமாக திண்டுக்கல் அருகே ரயில் தண்டவாளங்கள் பல இடங்களில் மண் அரிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் ரயில்கள் அனைத்தும் மிகவும் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக ரயில்கள் பல மணி நேரம் தாமதாகவே வந்து செல்கின்றன.
இன்றும் சென்னைக்கு தென் மாவட்டங்களிலிருந்து வந்த ரயில்கள் பல மணி நேரம் தாமதமாகவே வந்தன. பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரமும், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரமும், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 5 மணி நேரமும் தாமதமாக வந்தன.
பொதிகை, அனந்தபுரி, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஐந்து மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை தாமதமாக வந்தன.












Click it and Unblock the Notifications