தமிழகத்துக்குள் 48 பீகார் கொள்ளையர்கள் ஊடுருவல்
தூத்துக்குடி: பீகாரை சேர்ந்த 48 கொள்ளையர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை முதல் நெல்லை, தூத்துக்குடி வரை உள்ள பல்வேறு நகரங்களில் செல்போன் ஷோரூம்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதில் தூத்துக்குடியில் மட்டும் கடந்த ஒரே மாதத்தில் 4 இடங்களில் பல லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை போனது.
கடந்த 20ம் தேதி அதிகாலையில் தூத்துக்குடி, எட்டையாபுரம் ரோட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள செல்போன் ஷோரூம் கதவை உடைத்து 8 பேர் கொண்ட கும்பல் உள்ளே இருந்த செல்போன்களை கொள்ளையடித்து விட்டு தப்பி செல்ல முயன்றபோது காவலாளி உள்பட பொதுமக்கள் சிலர் கொள்ளையர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.
இதில் 2 பேர் மட்டும் சிக்கினர். மற்ற 6 பேர் தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்தவுடன் போலீசார் விரைந்து வந்து கொள்ளையர்களை கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பி ஓடியவர்களில் மேலும் 3 பேரை பிடித்தனர்.
பிடிபட்டவர்களிடம் தூத்துக்குடி எஸ்.பி தீபக் தமோர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில், செல்போன் கொள்ளையர்களுக்கு ஹிந்தி தவிர வேறு மொழி தெரியாததால் ஹிந்தி தெரிந்த போலீசாரை வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் பிடிபட்ட கொள்ளையர்கள் பீகார் மாநிலம் சம்பாரா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் அங்குள்ள ஒரு கிராமத்தில் உள்ள அனைவரும் திருட்டுத் தொழிலைத் தான் நீண்ட காலமாக செய்து வருவதாகவும் கூறினர்.
மேலும், பீகாரிலிருந்து 48 கொள்ளையர்கள் தமிழகத்திற்குள் ஊடுறுவியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இவர்கள் பகலில் கம்பளி விற்பனை செய்வது போல் வீடுகளை நோட்டமிடுவர். பின்னர் இரவில் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த மாதத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த செல்போன் கொள்ளையிலும் இந்தக் கும்பல்தான் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிந்துள்ளது.
தப்பி ஓடிய மற்ற 3 பேரை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications