தூக்கு தண்டனை பெற்ற 3 அதிமுகவினரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற அதிமுகவினர் 3 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.
இது தொடர்பான வழக்கில் சேலம் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 2ம் தேதி முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய 3 அதிமுகவினருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு 7 வருடங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதனையடுத்து முனியப்பன், நெடுஞ்செழியன் மற்றும் ரவீந்திரன் ஆகிய 3
பேரையும் கோவை மத்திய சிறையில் 2008 ஜனவரி 10ம் தேதியன்று தூக்கிலிட சேலம் நீதிபதி மாணிக்கம் வாரண்ட் பிறப்பித்தார்.
இந்நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். அவர்களின் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
3 மாணவிகள் மரண் மிகவும் கொடூர கொலை அல்ல. திடீரென ஏற்பட்ட ஒரு நிகழ்வு தான். மீடியாக்கள் இதை பெரிதுபடுத்தியதால் நீதிமன்றம் தவறான எண்ணத்தில் மரண தண்டனை அளித்துள்ளது. இறந்தவர்களின் உயிரிழப்புக்கு வன்முறை கும்பலே காரணம்.
அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த வழக்கு இப்பிரிவுக்கு உட்படாது. சந்தேகத்துக்கு இடமின்றி இது அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை. நேரடி சாட்சியங்களும் தவறானவை என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications