மக்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை: ஜெ. தாக்கு

சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. யாரும் மக்களுக்கு உதவி செய்யவில்லை. கேட்பாரற்றுக் கிடக்கிறது தமிழகம். இங்கு ஒரு அரசாங்கம் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக இளைஞரணி மாநாடு பயங்கர அராஜகத்தோடும், அதிகார துஷ்பிரயோகத்தோடும் எவ்வளவு தீமைகளை நடத்த முடியுமோ அவ்வளவு தீமைகளோடும் நடந்து முடிந்துள்ளது.
மாநாடு என்ற பெயரில் கருணாநிதி தனது மகனுக்கு முடிசூட்ட விரும்பி நடத்தப்பட்ட இந்த மாநாடு, பெரும் தோல்வியில் முடிந்துள்ளது. மு.க.ஸ்டாலின் தான் இனி முதல்வர் அல்லது துணை முதல்வர் என்று அறிவிக்க விரும்பியே திருப்புமுனை மாநாடு என்று கூவிக்கூவி அழைத்தார்கள்.
ஆனால் கருணாநிதி குடும்பத்து அண்ணன் 'செங்குட்டுவனால்' மாநாட்டின் முடிவு முறியடிக்கப்பட்டதால் எனக்கு பிறகு ஸ்டாலின் என்று அடையாளம் காட்டும் விழாவாக மட்டுமே நடந்து முடிந்திருக்கிறது.
பேரப் பிள்ளைகளை பெற்று தாத்தாவாகி விட்ட ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவதற்காக இந்த இளைஞர் மாநாடு நடத்தப்பட்டிருப்பதாக மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மாநாடு என்ற பெயரில் அறுவறுக்கத்தக்க அராஜக நிகழ்ச்சிகள்தான் நடந்துள்ளன. மாநாடு நடந்த இரண்டு நாட்களும் போக்குவரத்து வசதியின்றி மக்கள் அடைந்த துன்பங்கள், வீண் ஆடம்பரம், கலாச்சார சீர்கேடுகள் ஆகியவை தான் அரங்கேறியிருக்கின்றன.
தனியார் பஸ்கள் சேதம்:
மாநாட்டுக்காக தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பேருந்துகள் நெல்லைக்கு வரவழைக்கப்பட்டன. அரசு பேருந்துகளும் பெருமளவில் இயக்கப்பட்டன.
இவற்றில் 186 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பயங்கரமாக நாசம் செய்யப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. மேலும் பல பேருந்துகள் இதுபோல நாசம் செய்யப்பட்டுள்ளாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து எதிர்க்கட்சிகளுக்குத் தெரிய வந்து பேருந்து உரிமையாளர்களிடம் புகார் தருமாறு கூறியபோது, சேதமடைந்ததற்கான இழப்பீட்டுப் பணத்தைக் கொடுத்து விட்டனர். மீறி புகார் செய்தால், பேருந்துக்கான பெர்மிட்டையே ரத்து செய்து விடுவார்கள் என்று கூறி உண்மையை மறைத்து விட்டனர்.
ஜெனரேட்டர் போட்டுதான் மின்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பெயருக்குக் கூறி விட்டு, பெரும்பாலான இடங்களில் கொக்கி போட்டுத்தான் மின்சாரத்தை எடுத்துள்ளனர்.
திமுகவினரை தங்க வைக்க பல பகுதிகளில் உள்ள பள்ளிகளின் நிர்வாகிகள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். இதனால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர்.
திமுகவினர் தங்க இடம் மறுத்த காரணத்திற்காக பல பள்ளிகள் பெரும் நாசத்திற்கு ஆளாகியுள்ளன.
மழையால் மக்கள் பாதிப்பு:
நாட்டில் இன்று யாத மழை, தொடர் வெள்ளப்பெருக்கு, சாவு எண்ணிக்கை 40க்கு மேல் உயர்ந்துவிட்டது. வீடுகளை இழந்த மக்கள் தங்கும் இடம், உணவு, குடிதண்ணீர் ஆகியவற்றிற்கு ஆலாய் பறக்கிறார்கள்.
வீடுகளில் கழிவுநீர், வெள்ள நீர் புகுந்து அவற்றை வெளியேற்ற முடியாமல் திணறுகின்றனர். சாலைகள் சேதமடைந்து வெள்ளத்தால் பாலங்கள் உடைபட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. யாரும் மக்களுக்கு உதவி செய்யவில்லை.
கேட்பாரற்று தமிழகம் கிடக்கின்றது. தமிழகத்தில் ஒரு அரசாங்கம் நடைபெறுகிறதா என்று சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. என்னுடைய ஆட்சியாக இருந்தால் இந்நேரம் மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டிருப்பேன்.
ஓய்வெடுக்கும் ஸ்டாலின்:
ஆனால் மாநாடு நடத்திய களைப்பில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.லின் கேரளாவில் சுற்றுலா தலமான குமரக்கோமில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். கருணாநிதியோ டெல்லிக்குப் பறந்திருக்கிறார்.
வெள்ளப் பகுதிகளை எந்த அமைச்சரும் எட்டிப் பார்க்கவில்லை. மக்களைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை? இவர்கள் செய்கின்ற அக்கிரமங்களை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது. கூடிய விரைவில் மக்கள் இவர்களை தூக்கி எறிவார்கள் என்பது திண்ணம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications