தப்பிய கொலை குற்றவாளி-3 போலீசார் சஸ்பெண்ட்
சேலம்: சென்னை வக்கீல் மதனகோபால் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான இக்பால் மன்சூரி என்கிற இப்கான் போலீஸாரிடமிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2002ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை தி.நகரில் வக்கீல் மதனகோபால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். வக்கீல் மதனகோபால் போதைப் பொருள் கும்பலுக்கு எதிரான வழக்கில் ஆஜரானவர். எனவே அவரை போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கொலை செய்தனர்.
இந்தக் கொலை வழக்கில் மத்தியப் பிரதேசதத்தைச் சேர்ந்த இக்பால் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இக்பால் தவிர மற்ற 5 பேரில் 3 பேர் (இவர்களும் மத்தியப் பிரதேசத்தைச் ேசர்ந்தவர்கள்தான்) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு முதலில் சென்னையில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட இக்பால், சென்னை மத்திய சிறையிலிருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். நேற்று முன்தினம் இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதற்காக சேலம் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் இக்பாலை கிருஷ்ணகிரிக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு விசாரணையை முடித்து விட்டு மீண்டும் சேலம் கொண்டு வருவதற்காக அழைத்து வந்தனர்.
அஸ்தம்பட்டி அருகே வந்தபோது சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறினார் இக்பால். இதையடுத்து அவரை சிறுநீர் கழிக்க போலீஸார் அனுமதித்தனர். அப்போது திடீரென அங்கிருந்து தப்பி ஓடினார் இக்பால்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் இக்பாலைத் துரத்தினர். ஆனால் அவர் போலீஸ் பிடியில் சிக்காமல் ஓடி விட்டார். அங்கு தயாராக நின்றிருந்த காரில் ஏறி அவர் தப்பி விட்டார்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய இக்பாலைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் அஜாக்கிரதையாக இருந்த போலீஸ்காரர்கள் ரவி, தீர்த்தகிரி, மாதவன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்ய சேலம் சரக டிஐஜி செண்பகராமன் உத்தரவிட்டார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 போலீஸார் மீதும் ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. சமீபத்தில்தான் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இக்பாலைத் தப்ப விட்ட குற்றத்திற்காக சஸ்பெண்ட் ஆகியுள்ளனர்.
அவர்களுக்கும் இக்பால் தப்பியதற்கும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். 3 போலீஸாரிடமும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.