தந்திரங்களுக்கு எதிரான வெற்றி: மோடி
குஜராத் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் நரேந்திர மோடி.
அவர்களிடையே மோடி பேசுகையில், பாஜகவுக்கு மிகப் பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்த குஜராத் மக்களுக்கும், அதற்காக உழைத்த பாஜக தொண்டர்களுக்கும் எனது வணக்கங்கள், நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சி அவதூறு பிரசாரத்தை அவிழ்த்து விட்டது. எதிர்மறையான பிரசாரத்தை மேற்கொண்டது, தந்திரங்கள் பலவற்றைக் கையாண்டது.
ஆனால் அவற்றையெல்லாம் குஜராத் மக்கள் ஒதுக்கி விட்டு பாஜகவுக்கு வாக்களித்து 4வது முறையாக ஆட்சியைக் கொடுத்துள்ளனர்.
தேர்தல் முடிந்து விட்டது. பிரசாரத்தின்போது பேசிய பேச்சுக்களை அனைத்துக் கட்சியினரும் மறந்து விட்டு, குஜராத் மாநில நலனுக்காக, மக்களின் நலனுக்காக, மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட, பாஜக அரசுடன் ஒத்துழைத்து செயல்பட முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன் என்றார் மோடி.