மோடிக்கு லஷ்கர் இ தொய்பா மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு
காந்திநகர்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு மூலம் தாக்கக் கூடும் என்று மத்திய உளவுத்துறை குஜராத் மாநில அரசை எச்சரித்துள்ளது. இதையடுத்து மோடிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய அரசு குஜராத் அரசுக்கு ஒரு உஷார் தகவலை அனுப்பியுள்ளது. அதில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், மோடியை மனித வெடிகுண்டு மூலம் தாக்க திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை செய்தி வந்துள்ளதாகவும், மோடிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அது அறிவுறுத்தயுள்ளது.
இதையடுத்து மோடிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு உச்சகட்ட அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மோடி செல்லும் இடமெல்லாம் தீவிர சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் அகமதாபாத் நகரின் காலுபூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு மோடி செல்லவுள்ளார். இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
மோடி இசட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ளார். மத்திய அரசு அவருக்கு கருப்புப் பூனைப் படை பாதுகாப்பை வழங்கியுள்ளது. அதேசமயம், குஜராத் அரசும் மோடிக்காக விசேஷ அதிரடிப்படையை உருவாக்கி அந்தப் பாதுகாப்பை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராகத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. 3வது முறையாக மோடி முதல்வராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications