சேலத்தில் கடத்தப்பட்ட அரசு பஸ் விழுப்புரத்தில் மீட்பு
விழுப்புரம்: சேலம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சை சிலர் கடத்திச் சென்றனர். அந்தப் பேருந்து விழுப்புரம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. பேருந்தை கடத்தியவர்களைப் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.
மதுரை கோட்டத்திற்குச் சொந்தமான அரசுப் பேருந்து உசிலம்பட்டியிலிருந்து சேலத்திற்கு வந்தது. சிறிது நேரத்தில் மீண்டும் உசிலம்பட்டி திரும்ப வேண்டியிருந்ததால், பேருந்தை சேலம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி விட்டு பேருந்து ஓட்டுநர் பெருமாளும், நடத்துனர் ராஜேந்திரனும் ஓய்வெடுக்கச் சென்றனர்.
பின்னர் உசிலம்பட்டி கிளம்புவதற்காக அவர்கள் வந்தபோது பேருந்தைக் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர்கள் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து தமிழகம் முழுதும் உள்ள காவல்துறை சோதனைச் சாவடிகள் உஷார்படுத்தப்பட்டன. போலீஸாரும் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இந்த நிலையில் விழுப்புரம் அருகே, கடத்தப்பட்ட பேருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சேலம் போலீஸாருக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர்.
பேருந்தைக் கடத்தி வந்து விழுப்புரம் அருகே விட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications