கட்டிப்புரண்டு ஏட்டுக்கள் சண்டை - படுகாயம்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே இரண்டு தலைமைக் காவலர்கள் கட்டிப்புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் அரிவாள்களால் வெட்டிக் கொண்டனர்.
நாகர்கோவில், தம்மத்துக்கோணம் என்ற இடத்தைச் சேர்ந்த ரத்தினசாமி, போக்குவரத்து தலைமைக் காவலராக நாகர்கோவிலில் பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் செண்பகலிங்கம். இவர் கோட்டார் காவல் நிலையத்தில் ஏட்டாக இருக்கிறார்.
நாகர்கோவில் ஆயுதப்படை அருகே உள்ள காவல்துறை மைதானம் உள்ள பகுதியில் இவர்களின் பூர்வீக சொத்து உள்ளது. இதில் பாதை அமைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
இதுதொடர்பாக இருவருக்கும் சண்டை மூண்டது. இருவரும் காவல்துறை மைதானத்தில் கட்டிப்புரண்டு கடுமையாக அடித்துக் கொண்டனர். அப்போது ரத்தினசாமியை, செண்பகலிங்கம் அரிவாளால் வெட்டினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பதிலுக்கு ரத்தினசாமியும் வெட்டியதால் செண்பகலிங்கமும் காயமடைந்தார்.
இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டுள்ளனர். இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications