தலித்கள் பஸ்களில் அமர எதிர்ப்பு: கரூர் அருகே ஜாதி கலவரம்-போலீஸ் குவிப்பு!

கரூர்: கரூர் அருகே ஜாதி கலவரம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் அருகே உள்ள லாலாபேட்டையை அடுத்து போத்துராவுத்தன் பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த ஊரைசுற்றி பெருமாள் கோவில் பட்டி, செம்பாறைப்பட்டி, அக்ரகாரம்பட்டி போன்ற கிராமங்களில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊர்களை இணைக்கும் ஒரே பொது வாகனம் மினி பஸ் தான். கொசூரில் இருந்து புறப்படும் அந்த மினி பஸ் பெருமாள் கோவில் பட்டி, முத்தம்பட்டி, பஞ்சபட்டி வழியாக சென்று வருகிறது. இந்த பஸ்ஸில் தினசரி பல நூறு மக்கள் வேலைக்கும், பள்ளிக்கும் சென்று வருகின்றனர்.
இந்த பஸ் வரவில்லை என்றால் அந்த பகுதி கிராம மக்கள் பல கிலோ மீட்டர் சென்று தான் மெயின் ரோட்டை அடைந்து கரூர் போன்ற முக்கிய ஊர்களுக்கு செல்ல முடியும்.
இந்த வழியாக செல்லும் மினி பஸ்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அமர்ந்து வருவதற்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் எதிர்ப்பு தெரிவித்தது. தாழ்த்தப்பட்டவர்கள் அமர வைக்கக் கூடாது என பஸ் நிறுவனத்தையும் அவர்கள் மிரட்டினர். ஆனால், அதற்கு அந்த பஸ் நிறுவனம் படியவில்லை.
இந் நிலையில் அந்த பஸ் நேற்று அந்த வழியாக சென்று கொண்டிருந்தபோது அந்த பஸ்ஸை வழி மறித்த ஒரு கும்பல் தாழ்த்தப்பட்ட மக்களை சீட்டில் உட்கார அனுமதிக் கூடாது என வாதிட்டு அவர்களை பஸ்ஸில் இருந்து கீழே இறக்கி விட்டனர். மேலும் பஸ்ஸையும் சிறை பிடித்தனர்.
நேற்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்தால் பஸ்ஸை உடனே விடுவிக்க கோரி மாணவர்கள் கெஞ்சினர். ஆனால் இதை அந்தக் கும்பல் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள், தமிழக மக்கள் கழகம், புதிய தமிழகம் போன்ற கட்சியினர் அந்த கிராமத்திற்கு கார்கள், வேன்களில் இன்று குவிந்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவாகி பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதையடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டன. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications