தமிழ் மக்களுக்காக ஓயாது பாடுபம் கருணாநிதி - ஜெகத்ரட்சகன் புகழாரம்
சென்னை: முதல்வர் கருணாநிதி தமிழக மக்களுக்காக ஓயாமல் பாடுபடுகிறார் என்று ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து 4 நாட்கள் விடாமல் கொட்டிய மழையால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. விவசாய நிலங்களில் நன்கு விளைந்த பயிர்கள் மூழ்கிக் கிடக்கின்றன.
தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புடன் மிகப்பெரும் கட்சியின் தலைவராகவும் விளங்கக் கூடியவர் முதல்வர் கருணாநிதி. கடந்த 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நெல்லையில் முகாமிட்டு வரலாற்று சாதனையாக திமுக இளைஞர் அணியின் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக முடித்து, தமிழக இளைஞர்களுக்கு பல நல்ல திட்டங்களை அறிவித்து சென்னை திரும்பினார்.
மறுதினம் டெல்லியில் முதல்வர்கள் மாநாட்டில் ஆற்ற வேண்டிய உரை, மத்திய அரசிடத்தில் தமிழகத்தின் திட்டப்பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு பற்றிய புள்ளி விவரங்களை எல்லாம் சேகரித்தார்.
18ம் தேதி முதல் 21ம் தேதிவரை டெல்லியில் தங்கி தமிழகத்தின் நலனுக்காக பிரதமர் மற்றும் பல்வேறு அமைச்சர்களை சந்தித்து தாய் மண்ணுக்காக பல திட்டங்களை கொண்டு வருகிறார்.
அதேசமயம், அனைத்து பகுதிகளுக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை அனுப்பி வெள்ளச்சேதப் பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை முடுக்கி விடுகிறார். டெல்லி பயணத்தையும் வெற்றிகரமாக முடித்து சென்னை திரும்பியுள்ளார்.
22ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளச் சேத பகுதிகளை பார்வையிடுகிறார். பாதிக்கப்பட்ட மக்களுடன் மக்களாக கலந்து அவர்களின் குறைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்.
23ம் தேதி சென்னையில் இருந்து கடலூருக்கு சாலை மார்க்கமாக சென்று வெள்ளச் சேதங்களை பார்வையிட்டு மக்களின் துயரங்களை துடைக்கிறார்.
அவருக்கு வயதோ 84. ஆனால் இந்த வயதிலும் தமிழகம் தள்ளாடிவிடக் கூடாதே என்பதற்காக தனது வயதையும் பொருட்படுத்தாமல், சாலை மார்க்கமாகவே பயணம் செய்து மக்களின் குறைகளை நேரில் கண்டறிந்து தீர்த்து வைக்கிறார்.
மக்களின் உணர்வுகளை அறிந்து அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயலாற்றும் முதல்வராக நமது முதல்வர் கருணாநிதி விளங்குகிறார்.
ஓய்வுக்கே ஓய்வு கொடுத்துவிட்டு ஓய்வறியாச் சூரியனாக, சூறாவளிபோல சுழன்று சுழன்று பணியாற்றும் ஒரு முதல்வரை தமிழகம் பெற்றிருப்பது நாம் செய்த பெரும் பேறு தான்.
தமிழ் மக்களுக்காக ஓயாது பணியாற்றும் முதல்வர் கருணாநிதிக்கு ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்றென்றும் துணை நிற்கும் என்றார் ஜெகத்ரட்சகன்.












Click it and Unblock the Notifications