குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாடுகிறார் சோனியா

டெல்லி: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக ஒரு வாரத்திற்கு தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒத்தி வைத்துள்ளார்.
குஜராத் தேர்தல் முடிவு காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடிக்கு எதிராக கடுமையாக பிரசாரம் செய்தும், பல தீவிரமான குற்றச்சாட்டுக்களை வைத்தும் கூட பாஜகவின் பிரமாண்ட வெற்றியைத் தடுக்க முடியாமல் போனது காங்கிரஸ் தரப்பை ஆட்டம் காண வைத்துள்ளது.
சோனியா காந்தி மோடியையும், மோடி அரசையும் மரணத்தின் வியாபாரிகள் என வர்ணித்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என காங்கிரஸ் தரப்பு தற்போது நம்ப ஆரம்பித்துள்ளது.
இந்தப் பின்னணியில் சோனியா காந்தி ஒரு வாரத்திற்கு தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்தி வைத்து விட்டார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் கொண்டாடுவவதற்காக இந்த விடுமுறையை அவர் எடுத்துள்ளார்.
இத்தாலியிலிருந்து சோனியாவின் தாயார் மற்றும் சகோதரி டெல்லி வந்துள்ளனர். மகள் பிரியங்கா, அவரது கணவர், பேரக்குழந்தைகள், மகன் ராகுல் காந்தி ஆகியோருடன் ஒரு வாரத்தையும் செலவிடப் போகிறார் சோனியா.
சோனியா மற்றும் குடும்பத்தினர் புத்தாண்டை எங்கு கொண்டாடவுள்ளனர் என்பது பாதுகாப்பு கருதி தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் லட்சத்தீவு அல்லது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரன்தம்பூர் தேசியப் பூங்கா அல்லது உத்தரகாண்ட்டில் உள்ள கார்பட் தேசிய பூங்கா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு அவர்கள் செல்லலாம் எனக் கூறப்படுகிறது.
முதலில் பிரியங்கா தனது பாட்டி (சோனியாவின் தாயார்), கணவர், இரு குழந்தைகள், மாமனார், மாமியாருடன் கொண்டாட்டத்திற்குக் கிளம்புகிறார். சோனியாவும் மற்றவர்களும் பின்னர் இணந்து கொள்ளவுள்ளனர்.












Click it and Unblock the Notifications