உச்சிப்புள்ளியில் அதி நவீன துப்பாக்கிகள் சிக்கின
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கடல் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த அதி நவீன துப்பாக்கிகள் சிக்கின. இதனால் அப்பகுதியில் போலீஸார் தீவிர விசாரணையும், சோதனையும் நடத்தி வருகின்றனர்.
உச்சிப்புளி அருகே பலமுறை வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியுள்ளன. எனவே அப்பகுதியில் கடற்படையினரும், காவல்துறையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன்வலசை கிராமத்தில், கடல் மண்ணில் ஒரு மர்ம பார்சல் புதைந்திருப்பதை அப்பகுதியினர் பார்த்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் விரைந்து வந்து அந்தப் பார்சலை எடுத்தனர். அதைப் பிரித்து பார்த்தபோது 4 அதி நவீன தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.
கார்பைன் கன் எனப்படும் இந்தத் துப்பாக்கிகள் 7 எம்.எம். ரகத்தைச் சேர்ந்தவை. மிகவும் அதி நவீனமானவை ஆகும்.
இந்தத் துப்பாக்கிளை கைப்பற்றிய உச்சிப்புளி போலீஸார் துப்பாக்கிகள் எதற்காக மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்தன, யார் புதைத்து வைத்தது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதி நவீன துப்பாக்கிகள் சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications