ராமாயண இடங்களை மேம்படுத்தி சுற்றுலாவை வளர்க்க இலங்கை திட்டம்
கொழும்பு: ராமாயண கால புராதன இடங்களை மேம்படுத்தி, சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இலங்கைக்கும், ராமாயணத்திற்கும் உள்ள தொடர்புகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ராமாயணத்துடன் சம்பந்தப்பட்ட பகுதிகளை மேம்படுத்தி அதிக அளவிலான இந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்தியாவின் உதவியையும் நாடியுள்ளது இலங்கை. அங்கிருந்து இலங்கை சுற்றுலாத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு தற்போது இந்தியா வந்துள்ளது.
இதுகுறித்து இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணைய தலைவர் கலைச்செல்வம் கூறுகையில், எங்களது குழுவினர் தற்போது இந்தியா சென்றுள்ளனர். இலங்கையில் உள்ள ராமாயண காலத்து இடங்களை சீர்படுத்தி, மேம்படுத்த இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம்.
இந்த இடங்களில் ஒளி-ஒலிக் காட்சியை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் உள்ளன. இன்னும் எதுவும் இறுதியாகவில்லை.
இந்தியப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் கலைச்செல்வம்.