பனிப்பொழிவால் உற்பத்தி குறைவு - பூக்கள் விலை கிடுகிடு!
பாவூர்சத்திரம்:கடும் பனிப் பொழிவு காரணமாக உற்பத்தி குறைந்ததால் பூக்களின் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ கிலோ 700 ரூபாயாகவும், மல்லிகை பூ ரூ.600 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் உற்பத்தியாகும் பூக்கள் அருகிலுள்ள சிவகாமிபுரம் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து வியாபாரிகள் பூக்களை வாங்கி தென்காசி, ஆலங்குளம் மற்றும் கேரள பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாக கடுமையான பணி பொழிவு இருப்பதால் பூக்கள் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது. மேலும், தற்போது சபரிமலை மற்றும் மேல்மருவத்தூருக்கு இருமுடி கட்டி செல்பவர்களால் வெளி மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கிலோ ரூ. 300க்கு விற்ற பிச்சிப்பூ ரூ.700க்கும், 200க்கு விற்ற மல்லிகைப் பூ ரூ.600க்கும், சம்பங்கி பூ ரூ. 40லிருந்து ரூ. 100 ஆகவும், ரோஜாப்பூ ரூ. 15 லிருந்து ரூ. 40 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.