லாரி டிரைவரிடம் அழகியை காட்டி பணம் பறித்த கும்பல்
கரூர்: கரூர் அருகே நள்ளிரவில் அழகியை காட்டி லாரி டிரைவரிடம் பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து ஹைதராபாத் நோக்கி உப்பு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.
அந்த லாரி கரூர் மாவட்டம் அருகில் வந்த போது கணவாய் என்ற இடத்தில் ஒரு பெண் நின்று லாரியை கை காட்டி நிறுத்தியுள்ளார். பிரேக் போட்டு லாரியை நிறுத்திய டிரைவர் பாண்டியன் லாரியிலிருந்து கீழே இறங்கி அந்த பெண்ணிடம் விசாரித்துள்ளார்.
அப்போது அந்த பெண் லாரி டிரைவரை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். சபலம் அடைந்த லாரி டிரைவர் பாண்டியன் அந்த அழகியுடன் அருகில் உள்ள ஒரு புதர்ப் பகுதிக்குச் சென்றார்.
உல்லாசமாக இருக்கலாம் என நினைத்துச் சென்ற பாண்டியனுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் புதரில் மறைந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென கத்தியை காட்டி மிரட்டி கையில் இருக்கிற பணத்தைக் கொடுத்து விட்டுச் செல்லுமாறு மிரட்டியது.
இதையடுத்து கையில் இருந்த ரூ.2,000 பணத்தைக் கொடுத்துள்ளார் பாண்டியன். பணத்தைப் பறித்த அக்கும்பலும், அழகியும், சாலைக்கு வந்து அங்கிருந்த பாண்டியனின் லாரியை எடுத்துக் கொண்டு பறந்து விட்டனர்.
பணமும் போய், லாரியும் போய் சோகத்துடன் நடந்தே ஆண்டிப்பட்டி என்ற ஊருக்கு வந்து சேர்ந்தனர் பாண்டியனும், கிளீனர் ஆறுமுகமும். அங்கு அவர்களது லாரி நின்றிருந்தது.
பணம் போனால் பரவாயில்லை, லாரி கிடைத்ததே என்று மகிழ்ந்த அவர்கள் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸாரும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால் யாரும் சிக்கவில்லை.












Click it and Unblock the Notifications