சுனாமி.. 3வது ஆண்டு
-சுதா அறிவழகன்
([email protected])
சுழன்றடித்த சுனாமியின் கோரக் கரங்களில் சிக்கி ஆசிய கண்டமே அலறிய 3வது ஆண்டு நினைவு தினம் இன்று.
அதுவரை கேள்விப்பட்டிராத அந்த வார்த்தை, 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஆசிய கண்ட நாடுகளை அடித்துப் போட்டு விட்டுப் போனது. திடீரென பொங்கி வந்த கடல் அலைகளில் சிக்கி கன நேரத்தில் லட்சக்கணக்கானோர் தங்களது வாழ்க்கையை இழந்த சோக தினம் இது.
ஆழிப்பேரலை என்று கூறப்படும் சுனாமி குறித்து அதுவரை பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை. டிசம்பர் 25ம் தேதி நள்ளிரவில், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலில் ஏற்பட்ட மிகப் பயங்கர பூகம்பம், கடலை கொந்தளிக்க வைத்தது.
ஆசிய நாடுகளின் கடலோரப் பகுதிகள் புரட்டிப் போடப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மைல்களைக் கடந்து தெற்காசியாவின் கடை முனை வரை பல லட்சம் உயிர்களைக் காவு வாங்கி விட்டுத்தான் சுனாமியின் கோரம் முடிவுக்கு வந்தது.
என்ன நடந்தது என்றே தெரியாமல் பல அப்பாவி உயிர்கள் பறிபோன பயங்கர நாள்.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மயானமாயின. எங்கும் இறந்த உடல்கள், அந்த உயிர்களுக்குச் சொந்தமான உறவுகளின் கதறல்கள் என இடிந்து போனது தமிழகம்.
நாகை, கடலூர் மாவட்டங்கள் ஒரே நாளில், சில மணித் துளிகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறிகொடுத்து நின்றது.
சென்னை மெரீனா கடற்கரையே கடலுக்குள் போனது. வேளாங்கண்ணியில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முடித்து விட்டு கடற்கரையில் சந்தோஷமாக குளித்தும், குதூகலித்தும் கொண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் கடலின் கோர தாண்டவத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
ஆற்ற முடியாத சோகத்தை ஏற்படுத்தி விட்ட சுனாமி தாக்கியதன் 3வது ஆண்டு நினைவு நாளை இன்று ஆசிய நாடுகள் கனத்த இதயத்துடன், கண்ணீர் மல்க நினைவு கூறுகின்றன.
தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகை மாவட்ட கடலோர கிராமங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் இறந்த தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நினைவிடங்களில் படையல் வைத்து மறைந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனைகள் செய்து வருகின்றனர். சென்னை முதல் குமரி முனை வரை கடலோர கிராமங்கள் அனைத்திலுமே சுனாமி நினைவு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பல ஊர்களில் அமைதிப் பேரணிகளும், இரங்கல் கூட்டங்களும் நடந்து வருகின்றன.
வேண்டாம் இன்னும் ஒரு சுனாமி என்பதே அந்த கனத்த இதயங்களின் மனதில் குடி கொண்டுள்ள ஒரே பிரார்த்தனை.